மாயமான மலேசிய விமானத்தில் லித்தியம் பேட்டரிகளால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்: நிபுணர்கள்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் இருந்த லித்தியம் பேட்டரிகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 ரேடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு தெரிவித்தது. ஆனால் விமானத்தை மாதக் கணக்கில் தேடியும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விமான போக்குவரத்து நிபுணர்கள் விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
பேட்டரிகள்
செல்போன்கள், லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை விமானத்தில் எடுத்துச் சென்றால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று விமான போக்குவரத்து நிபுணர் கிளைவ் இர்விங் தெரிவித்துள்ளார்.
போயிங்
மாயமான மலேசிய விமானம் போயிங் 777 ரகத்தை சேர்ந்தது. அதில் 200 கிலோ லித்தியம் பேட்டரிகள் இருந்துள்ளன. அதிக தட்பவெட்பட்டத்தில் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
புகை
விமானம் உயரத்தில் பறக்கையில் லித்தியம் பேட்டரிகளில் உள்ள ஆர்கானிக் எலக்ட்ரோலைட் சேதம் அடைந்து அதில் இருந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை வந்திருக்கும்.
விமானம்
மலேசிய விமானத்தில் பேட்டரிகள் தீப்பிடித்ததும் அதில் இருந்து வந்த புகையால் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் சாதனங்கள் செயல் இழந்திருக்கும். இதனால் விமானி விமானத்தை அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க வழக்கமான பாதையை விட்டு விலகிச் சென்றிருப்பார் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்திய பெருங்கடல்
பேட்டரிகளால் ஏற்பட்ட தீவிபத்தால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கும். மேலும் பேட்டரிகள் தீப்பிடித்து அதில் இருந்து வந்த புகையால் விமானத்தில் இருந்தவர்கள் மயங்கியிருப்பார்கள். இதனால் தான் விமானம் கடலில் விழுந்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ
பேட்டரிகளால் ஏற்பட்ட தீ என்ஜினுக்கு பரவுவதற்குள் குளிர்ந்த காற்றால் அணைந்திருக்கும். விமானத்தை தீவிரவாதிகளோ, விமானியோ எதையும் செய்திருக்க மாட்டார்கள். தீ விபத்து தான் விமானம் கடலில் விழக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.