ஜெர்மனி.. ரயில் பயணிகளை சரமாரியாக கோடாரியால் வெட்டிய ஆப்கன் அகதி.. சுட்டுக் கொன்றது போலீஸ்!
உர்ஸ்பர்க், தெற்கு ஜெர்மனி: ஜெர்மனியில் ரயிலில் பயணித்த ஒரு 17 வயது ஆப்கானிஸ்தான் அகதி, சரமாரியாக கோடாரியால் பயணிகளை வெட்டியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
பிரான்ஸின் நைஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் விசுவாசி ஒருவர் லாரி மூலம் கூட்டத்தினர் மீது தாக்குதல் நடத்தி 84 பேரைக் கொன்ற நிலையில் தற்போது ஜெர்மனியில் அதே பாணி தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஜெர்மனியில் உள்ள உர்ஸ்பர்க் நகரில் இந்த கோடாரித் தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த 4 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது அவரை போலீஸார் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நபர் கோடாரியால் பயணிகளை வெட்டியபோது அல்லாஹு அக்பர் என்று முழங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவரிடம் வெட்டக் கூடிய வகையிலான சில ஆயுதங்கள் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த ரயில் பெட்டியில் 15 பேர் இருந்தனர். அத்தனை பேரும் தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியில் சமைந்து போயினர். கோடாரியால் வெட்டிய ஆப்கன் இளைஞர் உடனடியாக பெட்டியிலிருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். அவரைப் போலீஸார் பின் தொடர்ந்து சென்று சுட்டுக் கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பவேரியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோக்கிம் ஹெர்மான் கூறுகையில், கொல்லப்பட்ட நபர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்து முகாம் ஒன்றில் ஆரம்பத்தில் தங்கியிருந்தார். பின்னர் உசன்பர்ட் என்ற இடத்தில் உள்ள குடும்பம் ஒன்றுடன் அவர் தத்துப் பிள்ளையாக இணைந்து கொண்டார். அவர் குறித்த மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதைத் தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்று மறுத்து விட முடியாது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றார்.
ஜெர்மனியில் புலம் பெயர்ந்து வந்த அகதிகள் ஏராளமானோர் உள்ளனர். ஐரோப்பாவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வரும் புலம் பெயர்ந்த அகதிகள் பிரச்சினை ஜெர்மனியிலும் உண்டு. இங்கு இந்த ஆண்டு மட்டும் 2 முறை தீவிரவாதத் தாக்குதல்களும் நடந்துள்ளன. கடந்த மே மாதம் ஒரு நபர் கத்தியால் சிலரை சரமாரியாக குத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் 15 வயதான சபியா என்ற சிறுமி, போலீஸ்காரர் ஒருவரை சமையலறை கத்தியால் கழுத்தில் குத்தினார். ஐஎஸ்ஐஎஸ் ஈடுபாட்டால் இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.
அதேபோல 2015ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது மானபங்கப்படுத்தப்பட்டனர். அவர்களை அப்படிச் செய்தது அரபு வம்சாவளி அல்லது வடக்கு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் என்று போலீஸார் குற்றம் சாட்டினர்.