ஏய்.. எத்தாத்தாண்டியா நான் பக்கத்துல இருக்கேன்.. அதை விட்டுட்டு.. டென்ஷன் ஆன குட்டி யானை
தன்னை கவனிக்கும்படி குட்டியானை பாகனிடம் செய்த செயல் வைரலாகி வருகிறது.
ஜகார்த்தா: "இவ்வளவு பெரிய உருவம் நான் இருக்கிறேன்... தம்மாதூண்டு பொருளை கையில வச்சிக்கிட்டு என்ன செய்றே" என்ற கோபத்தில் ஒரு யானைக்குட்டி செய்த காரியம் இது!
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் பரூமன் நகாரி என்ற விலங்கியல் பூங்கா இருக்கிறது. அந்த பகுதியில் இது ரொம்ப ஃபேமஸான பூங்கா.
இங்க ஒரு யானைக்குட்டி உள்ளது. அதன் பெயர் உலி. பாவம்.. அதுக்கு அம்மா இல்லை. அதனால அந்த பூங்காவில் ரொம்ப செல்லமான யானைக்குட்டி அது. இதற்கெனவே பூங்கா நிர்வாகம் ஒரு பெண் பாகனை நியமித்து, யானைக்குட்டியை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி சொல்லி அவரது பொறுப்பில் விட்டுவிட்டது.
கவனிக்கவே இல்லை
இந்த நிலையில், ஒருநாள் பாகன் தன் செல்போனை கையில் வைத்து கொண்டு நோண்டி கொண்டே இருந்தார். கொஞ்ச நேரம் செல்போன் பார்த்துவிட்டு தன்னை கவனிப்பார் என்று யானைக்குட்டி முதலில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது. ஆனால் நேரம் ஆக ஆக பாகன் செல்போனை விடுவதாக இல்லை.
சைகை செய்தது
இதனால் யானைக்குட்டி கடுப்பாகி விட்டது. அதனால் பாகனிடம் சென்று, தன்னை கவனிக்குமாறு தும்பிக்கையால் இடித்து இடித்து காட்டி சைகை செய்தது. அப்போதும் பாகன் தன் கண்ணை செல்போனிலிருந்து எடுக்கவே இல்லை. தூரமாக இருந்த யானைக்குட்டி பக்கத்தில் வந்து நின்றதையும், தன்னை இடித்து தள்ளி கொண்டிருப்பதையும் கண்டுக்கொள்ளவே இல்லை.
கடித்து விட்டது
பொறுத்து பொறுத்து பார்த்த யானைக்குட்டி கடைசியில் அந்த பாகனை ஒரே கடி செல்லமாக கடித்தும் விடுகிறது. யானைக்குட்டி தள்ளிவிட்டு கடித்தபோதுதான், பாகன் செல்போனை விட்டு யானைக்குட்டியையே நிமிர்ந்து பார்த்தார்.
அன்புக்கும் உண்டோ
இப்படி யானைக்குட்டி செல்போனை பிடுங்கும் காட்சியும், பாகனை இடித்து தள்ளி கடிக்கும் காட்சியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.. அன்பு காத்திருக்கும்.. எத்தனை தாமதமானாலும்!