பஹ்ரைனில் 8,000 கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு!
பஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மனாமா: பஹ்ரைன் நாட்டில் எட்டு ஆயிரம் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சுரக்கும் புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்று பஹ்ரைன். அதிகளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை நம்பியுள்ள இங்கு, கடந்த 1932ம் ஆண்டு பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நாளொன்றிற்கு சுமார் 50 ஆயிரம் பீப்பாய் அளவுள்ள பெட்ரோலிய கச்சா கிடைக்கிறது. ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர் அளவுள்ளது.
இந்தக் கிணறு மட்டுமின்றி அபு சஃபா பெட்ரோல் கிணறு மூலமும் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பீப்பாய் அளவுள்ள பெட்ரோலிய கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இதில், சரிபாதியை சவுதி அரேபியாவுக்கு பஹ்ரைன் கொடுத்து விடுகிறது.
இந்நிலையில், அங்கு புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முஹம்மது பின் கலிபா அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய பெட்ரோல் கிணறானது பஹ்ரைன் நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் சவுதி அரேபியா அமைந்துள்ள திசையில் உள்ளது. ஏறக்குறைய 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்தக் கிணற்றில் இருந்து சுமார் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் கிடைக்கும் என அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அகழாய்வு நிறுவனத்தினர் மதிப்பீடு செய்துள்ளனர்.
தற்போது உடனடியாக இந்த கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்க இயலாது. அதற்கான உரிய பணிகள் முடிய எப்படியும் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்தக் கிணற்றை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் முடிவடைந்த பின்னரே, அந்தப் புதிய கிணற்றில் இருந்து தினந்தோறும் எத்தனை பீப்பாய் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க முடியும் என்பது தெரிய வரும்.