பஹ்ரைனில் இறந்த சிறுமியின் பீஸை கட்டுமாறு இந்திய தம்பதியை வற்புறுத்திய பள்ளி
பஹ்ரைன்: பஹ்ரைனில் வசிக்கும் இந்திய தம்பதியிடம் அவர்களின் இறந்த மகளின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பள்ளி ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜோபி செரியன். அவரது மனைவி ஷைனி பிலிப். அவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக பஹ்ரைனில் வசித்து வருகிறார்கள். அவர்களின் மகள் அபியா ஷ்ரேயா ஜோபி. அவர் பஹ்ரைன் இந்திய பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அபியாவுக்கு அம்மை ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.
ஒரே மகளை இழந்து வாடும் ஷைனிக்கு பள்ளியில் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. உங்கள் மகளின் கல்விக் கட்டணம் பாக்கியுள்ளது அதை உடனே செலுத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என் மகள் ஜனவரி மாதமே இறந்துவிட்டார் அவர் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி திறந்தபோது சேரவில்லை என்று ஷைனி தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை.
10 நாட்கள் கழித்து பள்ளி அதிகாரிகள் ஷைனியை மீண்டும் தொடர்பு கொண்டு கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இது குறித்து ஜோபி செரியன் கூறுகையில்,
எங்களின் ஒரே மகளை இழந்துவிட்டு நிற்கிறோம். இந்நிலையில் பள்ளியில் இருந்து எனது மனைவியை தொடர்பு கொண்டு கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கூறி அவரின் வேதனையை அதிகரித்துள்ளனர். எங்கள் மகள் இறந்துவிட்டாள் அதனால் அவள் பெயரை பள்ளி ஆவணங்களில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று அவர் தெரிவித்தும் கேட்கவில்லை என்றார்.
பள்ளி அதிகாரிகள் தங்களின் செயலுக்காக பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பள்ளியின் தலைவர் பிரின்ஸ் நடராஜன் கூறுகையில்,
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த மாணவியின் பெற்றோரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.