பஹ்ரைனில் பொங்கல் விழா… வீர விளையாட்டுகளுடன் பாரம்பரியம் காத்த தமிழர்கள்
பஹ்ரைன் பனாமா:பஹ்ரைனில் தமிழ் உணர்வாளர்கள் சங்கமும், இந்திய கிளப்பும் இணைந்தும் நடத்திய பொங்கல் பண்டிகை உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சூரியனை வணங்கி, பொங்கல் உண்டு தமிழகத்தில் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர்.
நகரங்களுக்கு இடம்பெயர்ந்த பலரும், பொங்கலை சிறப்பித்து மகிழ்ந்து, மீண்டும் பணியிடத்தும், குடியிருப்புகளுக்கும் திரும்பினர். புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கண்டும் மகிழ்ந்தனர்.
எங்கு பார்த்தாலும் கொண்டாட்ட நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க... தமிழகத்தை தாண்டியும் பொங்கல் பண்டிகை உலக நாடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில்... அரபு நாடுகளிலும் பொங்கல் பண்டிகை முன் எப்போதும் இல்லாத வகையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, பஹ்ரைனில் பல பகுதிகளில் தமிழர்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர்.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள்
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைத்து உழவர் திருவிழா 2019 என்ற பெயரில் பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடினர். நிகழ்விற்கு பஹ்ரைன் வேலைமற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் கீழ் செயல்படும் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தது.
அமைச்சகம் தந்த ஆதரவு
உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு அந்நிய நாட்டின்அமைச்சகம் பொங்கல் விழாவிற்கு ஆதரவுதெரிவித்திருந்தது இதுவே முதன் முறையாகும். பிரம்மாண்ட அலங்காரங்களுடன் 16 மீட்டர் ராட்சச பேனரில் பொங்கலின் சிறப்பம்சங்கள் அடங்கிய விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் குடில் என்ற பெயரில் விவசாய நிலம், குடிசை, பசு மாடு, ஜல்லிக்கட்டு மாடு போன்ற மாதிரிகள் செய்யப்பட்டிருந்தன. வண்டி, மரங்கள் தமிழரின் உடல்பயிற்சி கருவியான கரலக்கட்டை, பெண்கள் புத்திக் கூர்மையை மேன்படுத்த விளையாடும் பல்லாங்குழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் விதத்தில் மாதிரிகள் செய்து வைக்கப் பட்டிருந்தன.
கோலப்போட்டியும், பொங்கலும்
நிகழ்ச்சி முழுவதையும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் வளர்ச்சித் துறை செயலாளர் பஞ்சு ராஜ்குமார் மற்றும் மூத்த உறுப்பினர் பட்டிமன்றம் புகழ் பவானிபிரேமானந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கோலப்போட்டியுடன் தொடங்கி பின்பு விறகடுப்பில் 11 மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டிருந்தது.பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின்அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் பொறுப்பாளராக செயல்பட்டு பொங்கல் பொங்கியதும் பெண்கள் ஒன்றுகூடி குழவி சத்தமிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் ஆதிப்பறை இசை குழுவினரின் பறையிசையுடன் கலை நிகழ்சிகள் தொடங்கின.
கிராமிய கலைகளுடன் உற்சாகம்
கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கிராமிய ஆடல் பாடல் உட்பட பஹ்ரைன் தமிழர் வரலாற்றில் முதன் முறையாக மாடு ஆட்டம், பொய் கால் குதிரை ஆட்டம் நடைபெற்றது. அவற்றில் பங்கெடுத்த கலைஞர்கள் அனைவரும் பஹ்ரைனில் வசிப்பவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.அனைவரையும் விழா பொறுப்பாளர் முகமது அபுசாலி வரவேற்றார். பஹ்ரைன் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பொறியாளர் கூசைன் ஜவாத் அல்லைத் சிறப்ப விருந்தினராக கலந்துகொண்டதுடன் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் தொகுத்த இந்திய சுதந்திர போரில் தமிழரின் பங்கு என்ற நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார்.
24 மணி நேர மருத்துவ சேவை
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பாக தொடங்கப்பட்ட 24 மணி நேர மருத்துவ குழுவை எசிஇ ஹெல்த்கார் நிறுவன தலைமை செயல் அதிகார மருத்துவர் ஜகதீஷ் கரிமுட் தொடங்கி வைத்தார். 2019க்கான தமிழ் காலண்டரை கிரௌன் எலெக்ட்ரோமெக்கானிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் எஸ். இணையதுல்லா வெளியிட்டார். உறியடித்தல், கயிறு இழுத்தல், ரொட்டி கவ்வுதல், கனியும் கரண்டியும், உருளை கிழங்கு சேகரித்தல், கயிறு தாண்டுதல், சாக்கு ஓட்டம் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
விழாவில் அறுசுவை உணவு
6000 தமிழர்கள் கலந்த கொண்ட விழாவில் அனைவருக்கும் வாழை இலையில் 19 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் விழா குழுவினருக்கு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தி, படங்கள்: மதன்குமார் செல்லம், பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்