நாடு விட்டு நாடு தாண்டிய பின்பும் சகோதர பாசம்.. கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பஹ்ரைன் தமிழர்கள்!
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
மனாமா பஹ்ரைன்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
கடும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உலகம் முழுவதுமிருந்து உதவிகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பஹ்ரைனில் கேரள சமாஜம் சார்பாக நிவாரண பொருள்கள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பொருள்கள் பெறப்பட்டது.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க செயற்குழு சார்பாக பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பஹ்ரைனில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ள தமிழர்களிடமிருந்து பொருள்கள் முழு வீச்சில் சேகரிக்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட பொருள்கள் வண்டிகள் மூலம் கடந்த திங்கள்கிழமை இரவு பஹ்ரைன் கேரளிய சமாஜ நிர்வாகிகளான ஹரிஷ் மேனன் திலீஷ் குமார் மற்றும் சானி பால் கொலங்கேட்டன் முன்னிலையில் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன், பொது செயலாளர் க. செந்தில் குமார் மற்றும் உறுப்பினர் நலத்துறை செயலாளர் கண்ணன் ஆகியோர் ஒப்படைத்தனர்.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு பஹ்ரைன் வாழ் கேரள மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். சேகரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விமானம் மூலம் பஹ்ரைன் கேரளிய சாமஜம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.