தமிழகம், வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் இன்று பக்ரீத் கொண்டாட்டம்
மெக்கா: சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகள், தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தியாகத்தை போற்றும் புனித திருநாளான பக்ரீத் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள், ஏமன், தமிழகத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு இன்று காலை மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லீம்கள் சக முஸ்லீம் சகோதரர்களை கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசைய்யா மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி சவுதியின் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் இன்று காலை சிறப்புத் தொழுகை நடந்தது. தொழுகையை முன்நின்று நடத்திய இமாம் முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்தினார்.
உலகில் அமைதி நிலவவும், முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. வளைகுடா நாடுகளைப் போன்று இன்று அமெரிக்காவிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.