2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: இந்தோனேசியாவுக்கான தூதரை வாபஸ் பெற்ற ஆஸி.
கான்பெர்ரா: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து இந்தோனேசியாவுக்கான தங்களின் தூதரை வாபஸ்
பெறுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்ரூ சான், ஆஸ்திரேலியா வாழ் ஈழத் தமிழரான மயூரன் சுகுமாறன் ஆகியோர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்பட 8 பேருக்கு இன்று அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள பெசி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆன்ட்ரூ, சுகுமாறனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் செய்தியாளர்களிடம் இன்று காலை கூறுகையில்,
ஆன்ட்ரூ, சுகுமாறன் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது கொடூரமானது, தேவையில்லாதது. இந்தோனேசியாவின் சட்டங்களை மதிக்கிறோம். சர்வ சாதாரணமாக மரண தண்டனையை நிறைவேற்றுவதா. ஆன்ட்ரூ மற்றும் சுகுமாறனின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தை கண்டித்து இந்தோனேசியாவுக்கான ஆஸ்திரேலிய தூதரை வாபஸ் பெறுகிறோம். இந்தோனேசியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவு கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் முடிவால் ஆஸ்திரேலிய மக்கள் கோபம் அடைந்துள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆஸ்திரேலியா, இந்தோனேசியா இடையேயான உறவு முக்கியமானது, வருங்காலத்தில் மேலும் முக்கியமானதாக ஆகும் என்றார்.