மோடிக்கு எதிராக பாக். பலுசிஸ்தான் மாகாண சட்டசபையில் கண்டன தீர்மானம்
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர தமது சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பலுசிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்புகள் மோடியின் உரைக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாண சட்டசபையில் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த முகமது கான் லெஹ்ரி கொண்டு வந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் பலுசிஸ்தான் மாகாண முதல்வர் நவாப் சனாவுல்லா ஜெஹ்ரியும் கையெழுத்திட்டுள்ளார்.
மோடிக்கு எதிரான கண்டனத் தீர்மான விவரம்:
மோடியின் பலுசிஸ்தான் தொடர்பான பேச்சு, இம்மாகாணத்தில் பயங்கரவாத செயல்களை இந்தியா தூண்டிவிடுகிறது என்பதை நிரூபிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையில் மோடி தலையிடுகிறார். இது தொடர்பான ஐநா சபை விதிகளை மோடி மீறுகிறார்.
சர்வதேசத்தின் பார்வையில் இருந்து காஷ்மீர் பிரச்சனையை திசைதிருப்பவே இப்படி மோடி பேசியுள்ளார்.
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.