'டிரெண்டிங்கில்' பலுசிஸ்தான்... சிந்துசமவெளி தேசம்.. இன்றும் திராவிட மொழி பேசும் நிலம்!
குட்ட(குவெட்டா): பாகிஸ்தான் சுதந்திர நாளை துக்க நாளாகவும் பலுசிஸ்தானுக்கு விடுதலை கோரியும் சமூக வலைதளங்களில் இன்று காலை முதலே ஏராளமான பதிவுகள். #BalochistanIsNotPakistan, #BalochistanSolidarityDay ஆகிய ஹேஷ்டேக்குகள் இன்று டிரெண்டிங்கில் டாப் இடங்களில் இருக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் விடுதலை பெற்ற போது பலுசிஸ்தானம் தனி சுதந்திர பிரதேசமாகத்தான் இருந்தது. அந்த பெருநிலத்தை பாகிஸ்தான் ராணுவத்தின் துணை கொண்டு ஆக்கிரமித்தது.
1948 முதல் இன்று வரை பலுசிஸ்தான் தனிநாட்டுக்கான முழக்கம் பல்வேறு வடிவங்களில் தொடருகிறது. இந்த விடுதலைப் போரில் தன்னுயிர் நீத்த வீரர்கள், பொதுமக்கள் பல லட்சக்கணக்கானோர்.
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களும் மனித உரிமை மீறல்களும் இன்றும் சர்வதேச அரங்குகளில் "ஈழத்தை' போல எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த பலுசிஸ்தான் விடுதலைப் போருக்கு இந்தியர்கள் தார்மீக ஆதரவை தெரிவிக்கும் வகையில்தான் இன்றைய சமூக வலைதளங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
பலுசிஸ்தான், பாகிஸ்தானின் எல்லையில் ஈரானை ஒட்டி இருக்கும் ஏதோ ஒரு நிலப்பரப்பு அல்ல. தமிழர்களின் தாய்நிலமான சிந்துசமவெளி தேசம் செழித்தோங்கி வளர்ந்த பகுதிதான் இன்றைய பலுசிஸ்தான்.
அத்துடன் திராவிட மொழிக் குடும்பத்தில் ஒன்றான பிராகுயி மொழியை பலுசிஸ்தானின் ஆதி குடிகள் இன்றும் பேசுகின்றனர். மத்திய பலுசிஸ்தான் ஆதிகுடிகளின் மொழிதான் பிராகுயி.
சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வரைபடத்தில் பலுசிஸ்தான் நிலப்பரப்பில், உறை, வாகை,முல்லை கோ, மல்லி, சோல குட்ட என தமிழ்ப் பெயர்கள் கொண்ட நிலங்கள் இன்றும் சான்றாகவும் இருப்பதை உணரவும் முடியும். இது தொடர்பாக ஆர். பாலகிருஷ்ணன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகையில், இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம்.
கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம் என விவரிக்கிறார்.
ஈராக்கின் யாசிதி இன மக்கள் இன்னமும் முருக வழிபாட்டைப் போல மயிலையும் வேலையும் தீபமேற்றி வழிபடுகின்றனர். எகிப்தின் பிரமிடுகளுக்கும் தமிழர்களுக்குமான முடிச்சுகள் அப்படியே கிடக்கின்றன. ஈரானின் குறிஞ்ஜ்(குறிஞ்சி) போன்ற நகரங்களில் சிந்துவெளி சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
அப்படியான தமிழர்களின் ஆதிநிலப் பரப்பான பலுசிஸ்தான் இன்று விடுதலை வேண்டி நிற்கிறது, பூமிப்பந்தில் தமிழரின் ஆதிநிலப்பரப்பு ஒன்றுக்கு விடுதலை கோரி ஒட்டுமொத்த இந்தியர்களும் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர் என்பதையே #BalochistanIsNotPakistan, #BalochistanSolidarityDay ஆகிய ஹேஷ்டேக்குகள் வெளிப்படுத்துகின்றன.
வெல்லட்டும் பலுசிஸ்தானுக்கான போராட்டம்!