ஷாகிப் அல் ஹசன், மனைவியை இறக்கி விட்டுப் பறந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது! #shakibalhasan
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவியை இறக்கி விட்டுப் பறந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஹசனும் அவரது மனைவியும் உயிர் தப்பினர்.
காக்ஸ் பஜார் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷாகிப் அல் ஹசனும், அவரது மனைவி உம்மி அகமது சிஷிரும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் உயிர் தப்பியது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று கூறிய அவர்கள், விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை காக்ஸ் பஜார் நகருக்கு அருகே உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு டாக்காவிலிருந்து தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் ஹசன். பின்னர் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. போகும் வழியில் அது விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இனானி பீச் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. ஷாகிப் அல் ஹசன் இறங்கிய இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இந்த பீச் உள்ளது.