முன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வங்கதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் 19 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் 19 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக்ஹசீனாவின் அவாமிலீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் பேரணி நடத்தியது. அப்போது அந்நாட்டு பிரதமராக கலீதா ஜியா இருந்தார்.
இந்த பேரணியில் கையெறி வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 500 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு வங்கதேசத் தலைநகர் டாக்கா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. அதன்படி 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் 11 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமானும் ஒருவர்.
அதேபோல், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் லுட்ஃபோஸ்மன் பாபர் மற்றும் முன்னாள் கல்வித்துறை துணை அமைச்சர் அப்துஸ் சலாம் பிந்தூ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் முக்கிய வழக்குகளில் ஒன்றாக இந்த வழக்கு கருதப்பட்டதால் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.