போர்க்குற்ற வழக்கு: வங்கதேச முன்னாள் அமைச்சருக்கு சிறப்பு தீர்ப்பாயம் தூக்கு தண்டனை விதித்தது!!
டாக்கா: போர்க்குற்ற வழக்கில் வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சர் சையத் முகமது கைசருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வங்கதேச மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த தலைவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்தி இதற்கான விசாரணைக்காக 2010-ம் ஆண்டு தீர்ப்பாயத்தை அமைத்தார் பிரதமர் ஷேக் ஹசீனா.
இந்த தீர்ப்பாயத்தில் வங்கதேசத்தில் ஜெனரல் எச்.எம்.எர்ஷாத் தலைமையில் ராணுவ ஆட்சி நடைபெற்ற அமைச்சராக இருந்த சையத் முகமது கைசர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நிராயுதபாணிகளாக இருந்த 150-க்கும் மேற்பட்ட மக்களை சையத் முகமது கைசரின் போராளி படை கொன்று குவித்தார் என்பது சையத் முகமது கைசர் மீதான புகார்.
இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உபைதுல் ஹசன் தலைமையிலான தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
தீர்ப்புக்காக சையத் முகமது கைசர், சக்கர நாற்காலியில் அமர வைத்து தீர்ப்பாயத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பாயம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதி, அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.