வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு டாக்கா நீதிமன்றம 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டாக்கா: ஆதரவற்றோர் இல்லத்தில் பணம் கையாடல் தொடர்பாக வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு டாக்கா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த கலிதா ஜியா ஆதரவற்றோருக்கான அறக்கட்டளையிலிருந்து 2,52,000 அமெரிக்க டாலர் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கலிதா வங்கதேச தேசிய கட்சியின் தலைவராவார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் டாக்கா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாக்கா நீதிமன்றத்துக்கு கலிதா ஜியா அழைத்து வரப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவரை அழைத்து செல்லக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
அப்போது ஜியா ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் 5 போலீஸார் காயமடைந்ததாகவும் இரு மோட்டார் சைக்கிள்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததாகவும் தனியார் டிவி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.