1971 யுத்தத்தில் பாக். ராணுவத்திற்கு ஆதரவு 40 ஆண்டுக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவருக்கு தூக்கு
டாக்கா: வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் மிர் காசிம் அலியை அந்நாட்டு அரசு நேற்று தூக்கிலிட்டது.
மிர் காசிம் அலி வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர். 63 வயதான இவர் அந்த அமைப்பின் நிதி ஆலோசகராகவும் இருந்தார்.
1971ம் ஆண்டு வங்கதேச பிரிவினையின் போது மிர் காசிம் அலி, பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி அவர் மீது போர் குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமாக நடைபெற்ற வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து அவர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கு கடந்த மாதம் 30ம் தேதி அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, வங்கதேச ஜனாதிபதிக்கு மிர் காசிம் அலி கருணை மனுவை அனுப்பினார். ஆனால் ஜனாதிபதி, மிர் காசிம் அலியின் கருணை மனுவை நிராகரித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, காசிம்பூர் சிறையில் நேற்று இரவு மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார். போர் குற்றச்சாட்டின் பேரில் வங்கதேசத்தில் தூக்கிலிடுப்படும 6வது தலைவர் மிர் காசிம் அலி என்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அடுத்து வன்முறைகள் எதுவும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்காவில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.