கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை.. மேலும் ஒரு வழக்கில் டாக்கா நீதிமன்றம் அதிரடி
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டாக்கா: வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு மற்றொரு வழக்கு ஒன்றில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தான் பிரதமராக கலிதா ஜியா ஆட்சியில் இருந்தபோது, அவரது கணவர் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நிதி மோசடி
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையும் நடைபெற்றது. அதில் கலிதா ஜியா பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மோசடி வழக்கு
இந்நிலையில், தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்ரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா, டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே நிரூபிக்கப்பட்டன.
7 ஆண்டுகள்
இதையடுத்து, இந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, முறைகேடாக நிதி சேர்த்த கலிதா ஜியா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதிகபட்ச தண்டனை
இதனை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. வங்க தேச ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இதுதான் என்று கூறப்படுகிறது,