வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி.. 100 பேர் படுகாயம்
டாக்கா: வங்கதேச தலைநகரம் டாக்காவில் ஜவுளி ஆலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பத்துபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் டாக்காவில் காஷிபூர் என்ற இடத்தில் உள்ள ஜவுளி ஆலையில் 3 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பணி முடிந்து மாலையில் பலர் வீடு திரும்பி விட்டனர். சிலர் மட்டுமே ‘ஓவர் டைம்' ஆக கூடுதல் நேரம் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென தீ பிடித்தது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் கரும்புகை சூழ்ந்ததால் அவர்களால் உடனடியாக வெளியேற முடிய வில்லை.
எனவே தீயில் சிக்கி 10 பேர் உடல் கருகி இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
டாக்காவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான ஆயத்த ஆடை நிறுவனங்ளும், ஜவுளி ஆலைகளும் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இங்குள்ள ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து கட்டிடமும் இடிந்தது. இந்த விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் மற்றொரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ பிடித்தது. இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.