வங்கதேசத்தில் நெரிசலில் சிக்கி 10 பேர் பலி... பிரம்மபுத்ராவில் புனித நீராடியபோது பரிதாபம்!
டாக்கா: வங்கதேசத்தில் அஷ்டமி தினத்தை முன்னிட்டு பிரம்மபுத்ரா நதியில் புனித நீராடச் சென்ற பக்தர்கள் மத்தியில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒன்பது சதவீதம் பேர் இந்துக்கள். இவர்கள் அஷ்டமி தினத்தை மிகப் புனித நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
அஷ்டமி நாளன்று டாக்காவில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள நாராயங்கனி என்ற இடத்தில் ஓடும் பிரம்மபுத்ரா நதியில் புனித நீராடுவது அங்குள்ள இந்துக்களின் வழக்கம்.
அதன்படி, பத்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பிரம்மபுத்ராவில் புனித நீராடச் சென்றனர். அப்போது அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இறந்தவர்களில் 7 பேர் பெண்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூட்டம் அதிகமானதால் குறுகிய இரண்டு பாதையின் வழியாக ஆற்றுக்குள் செல்ல பக்தர்கள் முயற்சித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மக்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.