வேலைக்கார சிறுமி சித்ரவதை வழக்கு: வங்கதேச வீரர் ஷஹாதத் ஹூசேன், மனைவி மீதான குற்றச்சாட்டுகள் பதிவு
டாக்கா: வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்த வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹூசேன், அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசேன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் தமது வீட்டு வேலைக்கார சிறுமியை காணவில்லை என கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த புகார் கொடுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அந்த 11 வயது வேலைக்கார சிறுமி, ஷஹாதத்தும் அவரது மனைவியும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், ஷஹாதத் பாலியல் கொடுமைகளைச் செய்ததாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விவகாரத்தால் ஷஹாதத்தை சஸ்பெண்ட் செய்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதனைத் தொடர்ந்து ஷஹாதத் தலைமறைவானார். பின்னர் அவரது மனைவியை போலீஸ் கைது செய்ய வேறுவழியில்லாமல் நீதிமன்றத்தில் ஷஹாதத் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 மாதங்களுக்கு பின்னர் ஷஹாதத்தின் மனைவிக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது.
பெரும் போராட்டத்துக்கு பின்னர் ஷஹாதத்துக்கு மார்ச் 31-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை வங்கதேச பெண்கள், சிறார் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் இன்று ஷஹாதத் ஹூசேன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. மேலும் இவ்வழக்கில் அடுத்த மாதம் 22-ந் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.
இன்றைய விசாரணையின் போது பெயிலில் உள்ள ஷஹாதத்தும் அவரது மனைவியும் நேரில் ஆஜராகி இருந்தனர்.