தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதம் சிக்குவதை நினைத்தால்... இது ஒபாமாவின் பயம்!
திஹேக்: கிரிமியாவை ஆக்கிரமித்திருக்கும் ரஷியா அமெரிக்காவின் பிரதான எதிரி அல்ல.. அமெரிக்கா மீதான அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல்தான் கவலைக்குரியது என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
திஹேக்கில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் ஒபாமா ஆற்றிய நிறைவுரையில் கூறியதாவது:
ரஷியாவைப் பொறுத்தவரை அந்த பிராந்தியத்தில் அது வலுவானதாக இருக்கலாம். அதனால் அதன் அண்டை நாடுகளுக்குத்தான் அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் அமெரிக்காவின் முதன்மை எதிரியாக ரஷியா இருக்காது.
கிரிமியாவைத் தாண்டி ரஷியாவின் ஆக்கிரமிப்பு தொடருமேயானால் அதன் எல்லைப் பகுதியில் நேட்டோ உறுப்பு நாடுகளை பாதுகாக்கும் கடமை அமெரிக்காவுக்கு உண்டு. ரஷியாவின் கிரிமியா ஆக்கிரமிப்புக்கு எதிராக ராணுவ ரீதியாக இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் மிகப் பெரும் கவலையாக இருப்பது நியூயார்க் நகரத்தின் மீதான பயங்கரவாதிகளின் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல்தான். உலக நாடுகள் தங்களது அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பை சர்வதேச நடைமுறைகளுக்கேற்ப உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒபாமா கூறினார்.
இந்த மாநாட்டின் முடிவில் சர்வதேச விதிகளுக்கு அமைய அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படும் என்ற ஒப்பந்தத்தில் 35 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் ரஷியா,சீனா உள்ளிட்ட 18 நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.