5 நிமிஷ அதகளம்.. நேரில் பார்த்தவர்களின் "திக் திக்" நிமிடங்கள் #barcelonaattack
பார்சிலோனாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து நேரில் பார்த்தவர்கள் தங்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
பார்சிலோனா: பார்சிலோனாவில் கூட்டத்தில் வேன் ஏற்றி தாக்குதல் நடத்திய சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் 5 நிமிடங்களில் நடந்த முழுமையான பயங்கரவாதம் என்று தெரிவித்துள்ளனர்.
பார்சிலோனா ராம்ப்லாஸ் சுற்றுலா பகுதியில் சாலையை கடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த வேன் திடீரென பாய்ந்தது. வேனை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பி ஓடினார். இச்சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த திக் திக் நிமிடங்கள் குறித்து பணி முடித்துவிட்டு தன்னுடன் பணிபுரிவோருடன் சென்று கொண்டிருந்த கார்லஸ் டீனா (34) கூறுகையில், தீவிரவாதிகள் செலுத்திய வேன் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டத்தில் தறிகெட்டு ஓடியது. அப்போது மிக மோசமான நிலையில் தனது தாய் மீது சாய்ந்திருத்த சிறுவனை பார்ததேன். அந்த தாய் என்னால் உதவமுடியுமா என்று கண்ணால் பேசியதைக் கண்டவுடன் எனது இதயமே நொறுங்கியது என்றார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனாவில் உள்ள பூக்கடையில் பணியாற்றும் ஜோஸ் மோயா (51) என்பவர் கூறுகையில், தீவிரவாதிகள் செலுத்திய வேன் எனக்கு மிகவும் அருகில் சென்றது. கைக்கு எட்டும் தூரத்தில்தான் வேன் சென்றது. அது வேகமாக சென்று மக்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை இழுத்து தள்ளியது. மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். 5 நிமிடங்களுக்குள் அனைத்தும் நடந்து விட்டது என்றார் அவர்.
இதுபோல் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கடந்த 2004-ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு மோசமான வெடிகுண்டு தாக்குதலால் 192 பேர் கொல்லப்பட்டனர். 2000 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஜூலை 2016-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளான நைஸ், பெர்லின், ஸ்டாக்ஹோம் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.