ஊழல்: மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே கைது!!
கொழும்பு: ஊழல் மோசடி புகாரில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த உடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே. அவர் மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சே நாடு கடத்தப்படக் கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் வேறு வழியில்லாமல் நேற்று பசில் ராஜபக்சே கொழும்பு திரும்பினார்.
பிடிவாரண்ட் நிலுவையில் இருப்பதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறப்பட்டு வந்தது. இதனிடையே இன்று பசில் ராஜபக்சேவிடம் காலை முதல் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சுமார் 10 மணி நேர விசாரணைக்குப் பின்னர் பசில் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ரக் ரணவக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.