பாரீஸ் பட்கிளான் இசை அரங்கில் 110 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து படுகொலை செய்த தீவிரவாதிகள்!!
பாரீஸ்: உலகை உலுக்கிய பாரீஸ் தாக்குதலில் பட்கிளான் இசைக்கச்சேரி அரங்குக்குள் நுழைந்து 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாக்கி பயங்கரவாதிகள் கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் மிக கொடூரமாக தாக்குதலை நடத்தினர். இதில் 158 பேர் பலியாகி உள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களில் ஒன்று பட்கிளான் அரங்கம். இங்கே இசைகச்சேரிக்காக நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த 4 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் ஈவிரக்கமின்றி சுட்டனர். இதில் பலர் பலியாகினர்.
பின்னர் 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்தனர் அவர்கள்.. அப்போது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் அங்கேயே உடல் சிதறி பலியாகினர். இதில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
எஞ்சிய 4வது தீவிரவாதியை பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த அரங்கம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் எங்கெங்கும் சடலங்களாக சிதறிக் கிடந்தன.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன், "இது சிரியாவுக்காக... அல்லாஹூ அக்பர்... கடவுள் புனிதமானவர்" என அரபு மொழியில் முழக்கங்களையும் எழுப்பியதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோர சம்பவம் நிகழ்ந்த இடத்தை பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட் பார்வையிட்டார்.