ஃபுட்பால் போட்டி நடக்குறதால பாத்ரூம்ல ஜோடி ஜோடியா குளிங்க கண்ணுங்களா.. ரஷ்ய நகர நிர்வாகம் அட்வைஸ்!
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து நடந்தாலும் நடக்கிறது, அங்குள்ள மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள்.
நெய்மரின் நடிப்பு, மெஸ்சியின் ஏமாற்றம் என்பதையெல்லாம் தாண்டி, ரஷ்ய மக்களின் குளியல் இப்போது தலைப்பு செய்திகளாக அங்குள்ள ஊடகங்களில் இடம் பிடித்துள்ளது.
தென் மேற்கு ரஷ்ய நகரமான சமராவில்தான் இந்த கூத்து நடக்கிறது. இந்த நகரிலும் கால்பந்தாட்டங்கள் நடக்கின்றன என்பதால், தண்ணீர் செலவு அதிகமாக ஆகிறதாம்.
தண்ணீர் தேவை
கால்பந்தாட்ட வீரர்களுக்கான உபசரிப்பு, மைதான பராமரிப்பு என தண்ணீருக்கான தேவை என்பது அங்கு அதிகமாக உள்ளது. எனவே தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நகர நிர்வாகம் வினோதமான கோரிக்கையை மக்களுக்கு முன் வைத்துள்ளது. அதன்படி, அந்த நகர மக்கள், ஜோடி, ஜோடியாக குளியலை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகம்
"கால்பந்தாட்ட வீரர்கள், கால்பந்தாட்டத்தை காண பல நாடுகளிலும் இருந்து வந்துள்ள ரசிகர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, சமரா நகர மக்கள் ஒவ்வொருவராக குளிப்பதை தவிர்த்து ஜோடியாக குளிக்கவும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது நகர நிர்வாகம்.
வெப்பம் அதிகம்
சமரா நகரில் வெப்ப நிலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் இயல்பாகவே நீரின் தேவை கூடியுள்ளது. இதுதவிர, கால்பந்தாட்ட போட்டிகள் வேறு நடப்பதால் தண்ணீர் தேவை உச்சத்தை தொட்டுள்ளது. எனவே நகர நிர்வாகம் கூடுமான வரையில் கூடுதல் தண்ணீரை திறந்துவிட்டு வருகிறது. இந்த தகவலை, மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தண்ணீர் சிக்கனம், தேவை இக்கனம்
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம், ஜீரோ வாட்டர், அதாவது நீரற்ற நகரம் என்ற நிலைக்கு சென்றது நினைவிருக்கலாம். உலகின் பல பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவிலும் தண்ணீருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் அவசியத்தை இது உணர்த்துவதாக உள்ளது.