அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தை ரூ.4.41 லட்சம் கோடிக்கு வாங்குகிறது ஜெர்மனி நிறுவனம்!
வாஷிங்டன்: ஜெர்மனியை சேர்ந்த பேயர் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி விதை விற்பனை நிறுவனமான மான்சான்டோவை ரூ.4.41 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மரபணு மாற்ற விதை உற்பத்தி நிறுவனமா மான்சான்டோ நிறுவனத்தை வாங்க ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் ஏஜி நிறுவனம் முன்வந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை பலகட்டங்களாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மான்சான்டோவின் பங்குகளை தலா 128 டாலர்கள் என்ற விலையின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 66 பில்லியன் டாலர்கள் (ரூ.4.41 லட்சம் கோடி) விலைக்கு வாங்க, பேயர் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனை மான்சான்டோ நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.உலக அளவில் நடைபெறும் மிகப்பெரிய விற்பனை நடவடிக்கை இதுவாகும்.
மான்சான்டோ நிறுவனத் தயாரிப்புகள் இந்தியாவில் பரவலாக விற்கப்படுவதால், இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு கணிசமான சந்தை உள்ளது. பேயர் நிறுவனமும், வேளாண் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உள்ளிட்டவற்றை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தயாரிப்பை மேற்கொள்ளவும் பேயர் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, உலகின் முன்னணி மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்பனை நிறுவனமான மான்சான்டோவை வாங்குவதும் குறிப்பிடத்தக்கது.