கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் சிலர் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களில் பலர் அதிபர் 'ஜி ஜிங்பிங்கை' பதவி விலகுமாறும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் தொடர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற தங்கள் பத்திரிகையாளர் மீது அந்நாட்டு காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிபிசி செய்தி ஊடகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
எல்லாரும் கைவிட்டுட்டாங்க.. யாருமே இல்லையாம்? தலைவருக்கே இந்த நிலைமையா.. ஒன்று கூடிய சீனியர்கள்
கண்டனம்
இது குறித்து பிபிசி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு அங்கமாக ஷாங்காய் நகரிலும் போராட்டம் நடைபெற்றது. இது குறித்த தகவல்களை சேகரிக்க எங்களது செய்தியாளர் லாரன் அங்கு சென்றிருக்கிறார். ஆனால் அவருக்கு அப்பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டிருந்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் லாரன் தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்த சீன காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
தீ விபத்து
அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நீண்ட நேரம் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தார். அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பிபிசி கண்டிக்கிறது" என்று கூறியிருக்கிறது. முன்னதாக ஷாங்காய் நகரின் மேற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மக்கள் வீடுகளிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் தீ விபத்தில் உயிரிழப்பு அதிகரித்தது என்று ஷாங்காய் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உயிரிழப்பு
இந்நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில்தான் பத்திரிகையாளர் லாரன் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாக பிபிசி குற்றம்சாட்டியுள்ளது. ஷாங்காய் போன்று பெய்ஜிங், உரும்கி, நான்ஜிங், குவாங்சோ, வுஹான் என பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் தற்போது வரை 64 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுப்பாடுகள்
சீனாவின் வுஹான் நகரில் உருவானதாக கருதப்படும் கொரோனா தொற்றால் அந்நாட்டில் இதுவரை வெறும் 5,232 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இவ்வளவு குறைவான உயிரிழப்பு ஏற்படுவதற்கு அங்கு விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடுகளே காரணமாகும். ஒரு வகையில் இந்த கட்டுப்பாடுகள் உயிரிழப்புகளை குறைத்தாலும், மறுபுறத்தில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடைகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதால் சிறு குறு வியாபாரிகள் நஷ்டமடைந்துவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சில நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
நிலைமை
தற்போது சீனாவில் ஒட்டுமொத்தமாக 39,791 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதேபோல தென்மேற்கு நகரமான சோங்கிங்கிலும் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. முக்கிய நகரங்களில் தொற்று பாதிப்பு முந்தைய நாளைவிட அடுத்த நாட்களில் 66% ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர். ஏற்கெனவே சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த போராட்டத்தை அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க தொடங்கியுள்ளன.