சீனுக்கு வந்த ரஷ்யா.. சுதந்திர கொள்கை நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துவதாக சீற்றம்
பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்று ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
மாஸ்கோ: பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. சுதந்திரமான கொள்கையை பின்பற்றும் ரஷ்யா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் இது என ரஷ்யா பிபிசி ஆவணப்படம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடந்த போது குஜராத் முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்தார்.
குஜராத் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.
பிபிசி ஆவணப்படம்.. நாடாளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கமளிக்க கோரிக்கை.. டி.ஆர்.பாலு சொன்ன தகவல்!
பிபிசி ஆவணப்படம்
இந்த நிலையில், குஜராத் கலவரம் கலவரம் தொடர்பாக பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. "India - The Modi Question" என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசியின் இந்த ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.
மத்திய அரசு தடை
இந்த ஆவணப்படம் குறித்து, கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காலனியாதிக்க மனநிலை என்று சாடியிருந்தது. மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தகவல் போர் நடத்துவதாக
இந்த நிலையில், பிபிசி ஆவணப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, இங்கிலாந்து தகவல் போர் நடத்துவதாக கடுமையாக சாடியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா சகரொவா இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மரியா சகரெவா கூறியதாவது:- சுதந்திரமான கொள்கையை பின்பற்றும் ரஷ்யா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் இது.
மோதல் போக்குடன் செயல்பட்டுள்ளது
இந்த சூழல் தொடர்பாக எங்களின் இந்திய நண்பர்கள் ஏற்கனவே கருத்து கூறிவிட்டனர். சிலருடைய நலன்களுக்காக பிறருக்கு எதிரான கருவியாக இருந்து கொண்டு இங்கிலாந்தின் அதிகார மையங்களுக்கு எதிராக கூட மோதல் போக்குடன் பிபிசி செயல்பட்டுள்ளது. பிபிசி சுதந்திரமான தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிறுவனம் அல்ல. அது சார்ந்து செயல்படக்கூடியது. ஊடக தொழிலின் அடிப்படையான தேவைகளை கூட அடிக்கடி புறக்கணிக்கக் கூடியதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவாக ரிஷி சுனக்
பிபிசி தனது ஆவணப்படத்தை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்ட போதும் கூட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து இருந்தார். ரிஷி சுனக் கூறுகையில், "எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது" என்று கூறியிருந்தார்.