காருக்குள் சிக்கிக் கொண்ட "ராணி".. விடாமல் துரத்திய ஆயிரக்கணக்கான தேனீக்கள்... பீதியடைந்த பாட்டி!
லண்டன்: இங்கிலாந்தில் காருக்குள் சிக்கிக் கொண்ட ராணித் தேனீயை மீட்க ஆயிரக்கணக்கான தேனீக்கள் காரைப் பின் தொடர்ந்து வந்து துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தின் மேற்கு வேல்ஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட காரை கரோல் ஹோவர்த் என்ற 65 வயது பெண்மணி ஓட்டியுள்ளார். சம்பவத்தன்று இவர், ஹாவர்போர்ட்வெஸ்ட் நகரில் உள்ள ஒரு வணிக மையத்திற்குச் சென்றிருந்தார்.
அங்கு தனது காரை நிறுத்தி விட்டு சாப்பிடப் போனார். திரும்பி வந்து காரை எடுத்தபோது அவரது காரை ஒரு பெரும் தேனீ கூட்டம் துரத்தியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும் விடாமல் காரை ஓட்டிச் சென்றார்.
கிட்டத்தட்ட 24 மணி நேர பயணத்திற்குப் பிறகு தனது வீட்டுக்கு வந்து சேர்ந்த அவர் காரை விட்டு இறங்கிப் பார்த்தபோது, அந்தத் தேனீக்கள் காரை விடாமல் தொடர்ந்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தேனீக்களைப் பிடிப்போருக்கும், வனத்துறையினவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த தேனீக்களை பத்திரமாக ஒரு கூண்டுக்குள் அடைத்துப் பிடித்துச் சென்றனர்.
இதுகுறித்து பெம்பிரோக்ஷயர் கோஸ்ட் தேசிய பூங்கா ரேஞ்சர் டாம் மோசஸ் கூறுகையில், "அந்த தேனீக் கூட்டத்தின் ராணித் தேனீ காருக்குள் இருந்திருக்கலாம். அதை மீட்கும் முகமாகவே இந்த தேனீக்கள் படையெடுத்து வந்திருக்கலாம்" என்றார்.
ஆனால், அந்த ராணித் தேனீ காருக்குள் இருந்ததாக தெரியவில்லை. ஒரு வேளை அது தப்பி வெளியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதை அறியாமல் இந்த தேனீக்கள் காரைதத் தொடர்ந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தால் கரோல் பெரும் பீதியடைந்து விட்டார். தேனீக்களிடமிருந்து வனத்துறையைச் சேர்ந்தவர்கள் அவரைக் காப்பாற்றிய பிறகே அவர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.