ஹூஸ்டனில் சீன தூதரகம் மூடல்... அமெரிக்காவின் அடுத்த ஆயுதம்!!
பீஜிங்: அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகத்தை மூடுமாறு அந்த நாட்டுக்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியை பீஜிங் இன்று தெரிவித்துள்ளது. இதை அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையிலும், கொரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையிலும், ஹாங்காங் மீது சீனா புதிய சட்டத்தை திணித்து இருக்கும் நிலையிலும் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டித்து இருக்கும் சீனா, உடனடியாக இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ''உரிய மற்றும் சரியான நடவடிக்கையை இந்த விஷயத்தில் சீனா எடுக்கும். அமெரிக்காவின் அரசியல் ரீதியிலான தூண்டுதலாக உள்ளது. சர்வதேச சட்டத்தை அமெரிக்கா மீறியுள்ளது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு தூதரக ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளது.
மூர்க்கத்தனமான, நியாயப்படுத்த முடியாத சீன, அமெரிக்க உறவுகளை முறிக்கும் நாசவேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது'' என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் தெரிவித்துள்ளார்.
ஹூஸ்டனில் இருக்கும் சீனத் தூதரகத்தை செவ்வாய்க் கிழமை மூடுமாறு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று மாலை இந்த தூதரகத்திற்குள் இருக்கும் ஆவணங்களை சிலர் எரித்ததாகவும், தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாகவும் ஹூஸ்டனில் இருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. தூதரகத்தில் இருந்து புகை வெளியே வந்ததாகவும், அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.