கடும் கோபத்தில் மக்கள்.. மீண்டும் வெடிக்க காத்திருக்கும் பெய்ரூட்.. இந்த முறை கிடங்கு அல்ல.. புரட்சி
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த கிடங்கு வெடிப்பு காரணமாக அங்கு மக்கள் எல்லோரும் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.
Recommended Video
எதற்கும் லாயக்கு இல்லாத இந்த அரசை தூக்கி எறிய போகிறோம். போர் மீதும், லஞ்சம் மீதும், மதம் மீதும், பணக்காரர்கள் மீதும் செலுத்திய கவனத்தை மக்கள் மீது செலுத்தி இருந்தால் இப்படி நடந்து இருக்காது.
கண் முன்னே ஒரு நகரமே அழிந்து இருக்காது.. இப்படி கூறுவது லெபனான் நாட்டு மக்கள். பெய்ரூட் வெடிப்பின் நெருப்பு அணைந்துவிட்டாலும்.. இன்னும் மக்கள் இதயத்தில் எரியும் நெருப்பு அணையவில்லை.
பெரிய வெடிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டை அங்கு நிகழ்ந்த கிடங்கு வெடிப்பு மொத்தமாக முடக்கி போட்டுள்ளது. மொத்தமாக 20 கிமீ தூரத்திற்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. 40 வருடங்களாக போருக்கு இடையே அந்த நாடு கட்டி எழுப்பிய எல்லாம் நொறுக்கி சுக்கு நூறாக கிழிந்து இருக்கிறது. இது போக அங்கு பலி எண்ணிக்கையும் நிமிடத்திற்கும் நிமிடம் அதிகரித்தபடியே இருக்கிறது. இதுவரை 145 பேர் அங்கு கிடங்கு வெடிப்பு காரணமாக பலியாகி உள்ளனர்.
மக்கள் புரட்சி
இந்த நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த கிடங்கு வெடிப்பு காரணமாக அங்கு மக்கள் எல்லோரும் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அங்கு அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஹாசன் டியாப் மற்றும் அதிபர் மைக்கல் ஆன் ஆகிய இரண்டு பேருக்கும் எதிராக மக்கள் சாலையில் இறங்க தயாராக இருக்கிறார்கள்.
மக்கள் என்ன சொல்கிறார்கள்
எங்கள் வாழ்க்கை நாசமாகிவிட்டது. இந்த நாட்டையும், அரசையும் நம்பியது எங்கள் தவறுதான். பெய்ரூட் கண்ணீர் வடிக்கிறது. பெய்ரூட் கோஷம் இடுகிறது. பெய்ரூட் வீழ்ந்துவிட்டது. மோசமான ஊழல்வாதிகளை நம்பியது எங்கள் தவறு. மக்களை இவர்கள் எப்போதும் காக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும். இவர்களை தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.. இதுதான் பெய்ரூட் மக்கள் தற்போது எழுப்பும் கோஷம்.
என்ன நடக்கிறது
ஆம் பெய்ரூட்டில் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்க போகிறது. ஆனால் இந்த முறை வெறும் கிடங்கு வெடிப்பிற்காக மட்டுமல்ல.. பல்வேறு காரணங்களுக்காக அங்கு மக்கள் புரட்சி வெடிக்க உள்ளது. பல ஆண்டுகளாக உள்ளே கனலாக இருந்த கோபத்தை இந்த வெடிப்பின் நெருப்பு பற்ற வைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் கொஞ்சம் இயல்பு நிலை திரும்பியதும் அங்கு மக்கள் போராட்டம் தொடங்கும் என்கிறார்கள்.
ஏன் இப்படி
இதற்கு முதல் காரணம், அந்த நாட்டின் பொருளாதாரம். உலகின் மோசமான பொருளாதாரம் கொண்ட நாடுகளில் டாப் 5ல் லெபனான் இருக்கிறது. அதேபோல் உலகில் அதிக கடன்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் லெபனான் இருக்கிறது. இதெல்லாம் போக அந்த நாட்டின் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் சதவிகிதம் 30%ஐ நெருங்கி வருகிறது. கொரோனா இதை இன்னும் மோசமாக்கி உள்ளது.
வறுமை
ஒரு பக்கம் பொருளாதாரம் இப்படி இருக்க இன்னொரு பக்கம் மக்கள் கடும் வறுமையில் இருக்கிறார்கள் . அரசு அதிகாரிகள் மட்டும் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து, செல்வத்தை பெருக்கி வருகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆகி வருகிறார்கள். இதுதான் மக்களின் கோபத்தை மேலும் தூண்டி உள்ளது.
கோபம் அடைந்தனர்
ஒரு நாட்டில் இவ்வளவு நிலையற்ற தன்மை இருக்கும் போது, யாராவது மதம் மீது கவனம் செலுத்துவார்களா? ஆனால் லெபனான் செலுத்தும். அங்கு கிட்டத்தட்ட எல்லா மதமும், மதத்திற்கு உள்ள இருக்கும் எல்லா பிரிவும் மாறி மாறி அடித்துக் கொண்டு இருக்கிறது. சன்னி முஸ்லீம், ஷியா முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என்று மாறி மாறி அரசு பதவிகளில் அடித்துக்கொள்கிறார்கள். மதத்தின் பெயரால் ஆட்சிக்கு வரும் இவர்கள், தங்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம்.
போர் வருகிறது
இதெல்லாம் போக லெபனான் சிரியாவுடன் மோதலில் இருக்கிறது. இஸ்ரேல் உடன் மோதலில் இருக்கிறது. இன்னொரு பக்கம் ஈரான் உடனும் மோதி வருகிறது. சவுதி , அமெரிக்காவும் லெபனானில் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. போர்.. வறுமை.. ஏமாற்றம்.. மரணம்.. ரிப்பீட்.. இதுதான் லெபனான் குடிமகனின் வாழ்க்கை. இப்படி எல்லா பக்கமும் அந்நாட்டு மக்கள் தீவிரமாக சோதனைகளை, சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் போராட்டம்
இதனால்தான் அங்கு மக்கள் போராட்டத்தில் குதிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சாலையில் இறங்கி அரசை கவிழ்க்க போகிறார்கள். விரைவில் இதை எதிர்பார்க்கலாம். கட்டிடங்கள் இடிந்த பெய்ரூட் நகரத்தில் மீண்டும் ஒரு கல் எடுத்து வைக்கப்படும் முன் அங்கிருக்கும் அரசு மொத்தமாக கவிழும் என்று கூறுகிறார்கள். இதை பல அண்டை நாடுகள் ஏற்கனவே எதிர்பார்த்து காத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.