பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி பெல்ஜியத்தில் கைது !
பெல்ஜியம்: பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டு வந்த தீவிரவாதி முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 130 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவத்தில் பாரீஸ் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த அப்துல் ஹமீது அபௌதுக்கு நெருக்கமான ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சராப் எல் முவாதான் கடந்த 24ம் தேதி சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானார். அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் முவாதான் உள்பட 10 தீவிரவாதிகள் பலியாகினர்.
இந்நிலையில், பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டு வந்த முகமது அப்ரினி என்பவரை பெல்ஜியம் போலீசார் இன்று கைது செய்தனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதி பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியாகினர். இதையடுத்து பெல்ஜியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பேர் பிடிபட்டனர்.
இந்நிலையில் பாரீஸ் தாக்குதல்களுக்கு தொடர்புடைய முக்கிய தீவிரவாதி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு இந்த தாக்குதலில் சம்பந்தம் இருப்பதாக போலீசார் சந்தேகின்றனர். பிடிபட்ட தீவிரவாதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.