உங்கள் சோஷியல் மீடியா கணக்கை வேவு பார்க்கும் சீனர்கள்: உஷார் மக்களே உஷார்
பெர்லின்: சீனர்கள் சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்கி மக்களை கண்காணிப்பதாக ஜெர்மனி உளவுத் துறை எச்சரித்துள்ளது.
சீன உளவுத் துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் துவங்கி தகவல் சேகரிப்பதாக ஜெர்மனியை சேர்ந்த உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிங்கட்இன் உள்பட சமூக வலைதளங்களில் போலிக் கணக்கு துவங்கி மக்களின் விருப்பு, வெறுப்புகள், அரசியல் கருத்து உள்ளிட்ட தகவல்களை சீன உளவுத் துறையினர் சேகரிப்பதாக கூறப்படுகிறது.
லிங்கட்இன் மூலம் போலிக் கணக்கு துவங்கிய சீனர்கள் 10 ஆயிரம் ஜெர்மானியர்களை தொடர்பு கொண்டு வேலை இருப்பதாக கூறியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை சீன வெளியுறவுத் துறை ஏற்க மறுத்துள்ளது. ஜெர்மன் நிறுவனங்கள் குறிப்பாக அரசு துறைகள் இது போன்று செய்யாமல் பொறுப்புடன் பேச, நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.