எப்.ஐ.ஆரில் பெயர் இல்லாமலேயே தூக்கில் போடப்பட்ட பகத்சிங்: திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்
இஸ்லாமாபாத்: பிரிட்டீஷ் போலீஸ் அதிகாரியை கொலை செய்த வழக்கில் எப்.ஐ.ஆரில் பெயர் சேர்க்கப்படாமலேயே பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவருக்கு தூக்கு தண்டனை அளித்து 83 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மையை லாகூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
எப்.ஐ.ஆர்.எங்கே?
சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங், பிரிட்டீஷ் அரசாங்கத்தால் , 1931ம் ஆண்டு லாகூரில் 23வயது வயதில் தூக்கு தண்டனைக்கு உள்ளக்கப்பட்டார். ஆனால் பிரிட்டீஷ் போலீஸ் அதிகாரியை கொலை செய்தற்காக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் எங்கே என்பது குறித்த கேள்வி எழுந்தது. இது குறித்து பகத்சிங் நினைவு அமைப்பின் தலைவர் இம்தியாஸ் குரேசி பாகிஸ்தானின் லாகூர் கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, எப்.ஐ.ஆர் நகலை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அனார்கலி காவல் நிலையத்தில் பதிவு
கோர்ட் உத்தரவை தொடர்ந்து லாகூர் போலீசார் குறிப்பிட்ட எப்.ஐ.ஆரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதியாக தற்போது அதை கண்டுபிடித்துள்ளனர். அனார்கலி காவல் நிலையத்தில் 1928ம் ஆண்டு டிசம்பர் 17ம்தேதி மாலை 4.30 மணிக்கு அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக, அடையாளம் தெரியாத இரு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாட்சி வாக்குமூலம்
முதல் தகவல் அறிக்கையில் கண்ணால் கண்ட சாட்சி ஒருவரின் வாக்கு மூலம் அதில் உள்ளது. அவர் தனது வாக்குமூலத்தில் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரமுள்ளவரும், இந்து முகச்சாயல் கொண்டவரும், ஒல்லியான அதே நேரம் வலிமையான உடலமைப்பும், லேசான தாடி வைத்திருந்தவருமான ஒரு இளைஞர் இக்கொலையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அது பகத்சிங்தானா என்பதை அவர் கூறவில்லை. பகத்சிங் என்ற நபர்தான் கொன்றார் என்பதற்கான எந்த ஒரு வார்த்தையும் எப்.ஐ.ஆரில் இல்லை.
விசாரணையின்றி தூக்கு
இந்த எப்.ஐ.ஆர் காப்பியை கோர்ட்டில் காவல்துறையினர் தற்போது சமர்ப்பித்துள்ளனர். அதன் ஒரு நகலை இம்தியாஸ் குரேசியிடம் கோர்ட் அளித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், கொலை வழக்கு தொடர்பாக 450 சாட்சியங்களிடம் விசாரணையே நடத்தாமல் பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வழக்கறிஞருக்கும் வாதாட அனுமதி கொடுக்கப்படவில்லை என்றார்.