பிக்பாஸ்-3 டைட்டில் வென்ற முகேன் ராவ்-க்கு மலேசியாவில் செம உற்சாக வரவேற்பு
Recommended Video
கோலாலம்பூர்: விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ்-3 சீசனின் டைட்டில் வென்று நாடு திரும்பிய முகேன் ராவ்-க்கு மலேசியாவில் உறவினர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிக்பாஸ் சீசன் -3 ல் இம்முறை மலேசியாவின் முகேன் ராவ், ஈழத்தின் தர்ஷன், லொஸ்லியா என அறிமுகம் இல்லாதவர்களும் பங்கேற்றனர். இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
வழக்கம் போல பிக்பாஸ் வீடுகளில் நடைபெறும் அத்தனை அக்கப்போர்களும் சுவாரசியங்களும் இம்முறைக்கும் குறைவில்லை.. கடந்த முறைகளை விட இம்முறை காதல் காட்சிகள் அதிகம்.
இந்த சீசனில் மலேசியாவின் முகேன் ராவ் டைட்டில் பட்டத்தை கைப்பற்றி பரிசுத் தொகையான ரூ50 லட்சம் பெற்றார். பிக்பாஸ் 3- சீசன் டைட்டில் வென்ற முகேன் ராவ் நேற்று மலேசியாவுக்கு திரும்பினார்.
அங்கு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது. பத்துமலை முருகன் கோவில் முன்பாக திறந்த வாகனத்தில் ஏறி நின்று தாம் பெற்ற பிக்பாஸ் கோப்பையை ரசிகர்களிடம் காட்டி அன்பைப் பெற்றார். அப்போது பேசிய முகேன் ராவ், பிக்பாஸ் போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு ஆதரவு அளித்த அத்தனை மலேசிய மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்றார். முன்னதாக முகேன் ராவை வரவேற்க கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல மணிநேரம் ரசிகர்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.