'கூகுள் எர்த்தை' பயன்படுத்தி மும்பை தாக்குதலுக்கு ஸ்கெட்ச்: அமெரிக்க நாளிதழில் அம்பலம்
நியூயார்க்: 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பெரிதும் உதவியாக இருந்தது 'கூகுள் எர்த்' மேப் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2008ம் ஆண்டு மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 3 அமெரிக்கர்கள் உட்பட 166 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா-அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் அரசுகளுக்கு நடுவே நடைபெற்ற கருத்து பரிமாற்ற தகவல்களை உளவாளி ஸ்னோடன் வெளிக்கொண்டு வந்திருந்தார். அதை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதிலுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின், டெக்னாலஜி பிரிவு தலைவன் ஜரார் ஷா. 30 வயதேயான இவன்தான் கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதிகளை நன்கு கையாளுவதில் நிபுணத்துவம் பெற்றவன்.
தொழில்நுட்ப பயிற்சி
மும்பைக்குள் 10 தீவிரவாதிகளை அனுப்பி தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா தலைமை முடிவு செய்ததும், தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிரவாதிகள் ஜரார் ஷாவிடம் வந்து தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
கூகுள் எர்த்
அப்போது மும்பையிலுள்ள கட்டிடங்கள், அவற்றை சென்றடையும் வழி போன்றவற்றை கூகுள் எர்த் மேப் மூலமாக காண்பித்துள்ளான் ஜரார் ஷா. இதன்படியே தாக்குதலும் நடந்துள்ளது.
போலி பெயரில் இணைய தொலைபேசி
ஜரார் ஷா இன்டெர்நெட் போன் ஒன்றை பயன்படுத்திவந்துள்ளான். அந்த போனை, மும்பையை சேர்ந்த காரக்சிங் என்ற புனைப்பெயரில் ஜரார்ஷா அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வாங்கியுள்ளான். பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறாமல், காரக்சிங் என்ற பொய் பெயரில் அந்த போனை வாங்கி உளவு அமைப்புகளை குழப்ப ஜரார்ஷா திட்டமிட்டுள்ளான்.
பிரிட்டீஷ், அமெரிக்கா, இந்தியா கண்காணிப்பு
இதனிடையே பிரிட்டீஷ் உளவு அமைப்பு ஜரார்ஷாவின் நடவடிக்கைகள், இணைய பயன்பாடு போன்றவற்றை கண்காணித்து வந்துள்ளது. அதேபோல இந்திய உளவு அமைப்பும் ஜரார்ஷாவை கண்காணித்துள்ளது. இவர்கள் இருவரும் கண்காணிப்பது தெரியாமல் அமெரிக்க உளவு அமைப்பும் அதே நபரை கண்காணித்துள்ளது. அமெரிக்கா இணைய உளவை மட்டும் நம்பாமல், வேறுவகையிலும் ஜரார்ஷாவை கண்காணித்துள்ளது.
அப்போவே சொன்னது
மும்பை தாக்குதலுக்கு சில மாதங்கள் முன்பே இந்தியாவிடம் லஷ்கர் இ தொய்பா பெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால் தாக்குதல் முடிந்த பிறகுதான், இந்தியாவும் ஜரார்ஷாவை கண்காணித்து வந்த விவகாரம் வெளியே வந்தது. பிரிட்டீஷ் உளவு அமைப்பு, ஜரார்ஷா தனது இணையதளத்தில் எதையெல்லாம் தேடினார், எப்படியெல்லாம் அதை பயன்படுத்தினார் என்ற விவரத்தை கூட கையில் வைத்திருந்தது.
கோட்டைவிட்ட நாடுகள்
அப்போதைய தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர்மேனனும் இதையேத்தான் சொன்னார். "பிரிட்டீஷ், அமெரிக்கா மற்றும் இந்திய உளவு அமைப்புகள் தங்களுக்குள் தகவலை பரிமாறிக்கொள்ள தவறிவிட்டன. தாக்குதல் நடந்த பிறகுதான், அனைத்து ஆதாரங்களையும் இந்த மூன்று உளவு அமைப்புகளும் எடுத்து வெளியேவிடுகின்றன" என்றார்.
புள்ளியை இணைக்க தெரியவில்லை
மூன்று உளவு அமைப்புகளுமே நன்றாகத்தான் புள்ளி வைத்திருந்தன. ஆனால் அந்த புள்ளிகளை இணைக்கும் வித்தை தெரியாமல் மும்பை தாக்குதலை நடத்தவிட்டுவிட்டனர். இவ்வாறு அந்த செய்தித்தாழ் கூறியுள்ளது.