ஜப்பானில் வெடித்த மக்கள் போராட்டம்.. ஷின்சோ அபே இறுதிச் சடங்குக்கு இத்தனை எதிர்ப்பா? ஏன் தெரியுமா?
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்குக்கு பல ஆயிரம் கோடி செலவிடப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர் ஷின்சோ அபே. கடந்த 2006 முதல் 2007-ம் ஆண்டு வரையும், 2012 முதல் 2020-ம் ஆண்டு வரையும் அந்நாட்டின் பிரதமராக அவர் பதவி வகித்திருக்கிறார்.
இதனிடையே, உடல்நிலை மோசமானதன் காரணமாக அரசியலில் இருந்து விலக முடிவு செய்த ஷின்சோ அபே, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருந்தபோதிலும், கட்சி பணிகளில் அவர் எப்போதும் போல ஈடுபட்டு வந்தார்.
ஷின்சோ அபே இறுதிச்சடங்கு பட்ஜெட் இவ்வளவா?..இங்கிலாந்து ராணிக்கே குறைவுதானே.. கடுப்பான ஜப்பான் மக்கள்
துப்பாக்கிச் சூடு
இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 8-ம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ஷின்சோ அபே மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பானின் முக்கிய தலைவராக இருந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற இளைஞரையும் போலீஸார் கைது செய்தனர்.
பிரம்மாண்ட நினைவேந்தல்
ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு அவரது இறுதிச்சடங்கு ஜூலை 8-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக முறையில் நடைபெற்று வரும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அதேபோல, 100 நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஜப்பான் மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில், ஷின்சோ அபேவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக அதிக அளவில் பணம் செலவிடப்படுவதை ஜப்பான் மக்கள் விரும்பவில்லை. இந்நிகழ்வுக்காக 1.66 பில்லியன் யென் தொகையை செலவிட ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 96 கோடி ரூபாய் ஆகும். இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு செலவு செய்த தொகையை விட இது அதிகம் எனக் கூறப்படுகிறது. இதனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
வெடித்தது போராட்டம்
ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று, பணவீக்கம் ஆகியவற்றால் ஜப்பான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வளவு நிதியை நினைவேந்தலுக்கு செலவிடக் கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஜப்பான் அரசு மக்களின் குரலை சட்டை செய்யவில்லை.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பல இடங்களில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலும், ஷின்சோ அபே மேற்கொண்ட சில தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டியும் மக்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட நினைவேந்தல் நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது, மக்கள் போராட்டமும் நடைபெற்றதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் திணறினர். பின்னர் சிறப்புப் படைகள் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.