இன்று தொடங்குகிறது துபாய் விமான விற்பனைக் கண்காட்சி: புதிய விமானங்கள் அறிமுகம்
துபாய்: துபாய் விமான விற்பனைக் கண்காட்சியில் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய விமான நிறுவனங்கள் புதிய விற்பனை ஆர்டர்களைப் பெறும் வகையில் புதிய வகை விமானங்களை அறிமுகப் படுத்துகின்றன.
துபாயில் இன்று துவங்கும் இந்த விற்பனைக் கண்காட்சியே விமான வர்த்தகத்தின் மிகப்பெரிய விற்பனை சந்தை எனக் கருதப் படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியில் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானநிறுவனங்கள் புதிய விமானங்களை சந்தையில் அறிமுகப் படுத்த உள்ளன.
இதனால், புதிய விற்பனை ஆர்டர்களைப் பெறுவதில் இந்த இரண்டு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
777- எக்ஸ்....
இந்தக் கண்காட்சியில், போயிங் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நெடுந்தொலைவு விமானமான 777-எக்ஸ் வகையை அறிமுகப்படுத்துகின்றது. இந்த விமானத்திற்கு வளைகுடா விமான நிறுவனங்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த எரிபொருள்...
குறைந்த அளவு எரிபொருள் நுகர்வு இயந்திரங்கள் மற்றும் கலப்பு இறக்கைகளுடன் பரந்த உடலமைப்பு கொண்ட இவ்வகை விமானங்கள் வரும் 2020 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.அப்போது,1990ல் அறிமுகப்படுத்தப்பட்ட 777க்கு மாற்றாக இது அமையும் எனத் தெரிகிறது.
ஆர்வம்...
அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு முன்னரே இந்த விமானத்தின் மீது நிறைய நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1,473 விமானங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர்பஸ்க்கு மாற்று..?
இந்நிலையில் வரும் 2017ம் ஆண்டு அறிமுகப் படுத்தவுள்ள இந்த வகை விமானங்கள் 400 பயணிகள் கொள்ளளவுடன் ஏர்பஸ் நிறுவனத்தின் வகைக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எமிரேட்ஸ் ஆர்வம்....
துபாய் நாட்டைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் 100 முதல் 175 விமானங்களை வாங்கக் கூடும் என நம்பப் படுகிறது. சென்ற மாதமே எமிரேட்ஸ் நிறுவனத் தலைவர் டிம் கிளார்க் இதுகுறித்த தனது ஆர்வத்தினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியோ மாதிரி....
இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனமும் தனது புதிய ஏ-350 மற்றும் நியோ மாதிரிகள் குறித்து இன்று அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப் படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.