ஒசாமா பின் லேடனின் மருமகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய அமெரிக்க கோர்ட்
நியூயார்க்: அமெரிக்கர்களை கொல்ல திட்டமிட்டது, தீவிரவாதிகளுக்கு உதவியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்துக்கு நியூயார்க் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
அமெரிக்க படையால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த்(48). அமெரிக்காவில் வசித்து வரும் அவர் அமெரிக்கர்களை கொலை செய்ய திட்டமிட்டது, தீவிரவாதிகளுக்கு உதவியது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு நியூயார்க் நகரின் மான்ஹாட்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்றம் சுலைமானுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
முன்னதாக நீதிமன்றத்தில் சுலைமான் கூறுகையில், நான் ஆண்டவனைத் தவிர வேறு யாரிடமும் கருணையை எதிர்பார்க்க மாட்டேன் என்றார்.
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் தாக்கியதில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியான வீடியோவை பார்த்து சுலைமான் மகிழ்ச்சி அடைந்தது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த அன்று மாலை சுலைமான் ஆப்கானிஸ்தானில் உள்ள குகையில் ஒசாமாவை சந்தித்துள்ளார். அப்போது இந்த தாக்குதல்களை நாம் தான் நடத்தினோம் என்று ஒசாமா சுலைமானிடம் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா சார்பில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் செய்த சுலைமான் ஒசாமாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.