இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே ஐஎஸ் கொடியுடன் ஊர்வலம் போன ஜோடி
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியுடன் ஊர்வலம் போன ஆண், பெண் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ஆண் பெரிய கொடியுடன் செல்ல, அப்பெண் சிறிய கொடியை தனது தோளில் போட்டபடி சென்றார். போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், 'அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டே நடந்து கொண்டதாக' தெரிவித்துள்ளனர்.
அந்த ஆண் தனது முதுகுப் பகுதியில் மிகப் பெரிய கொடியை பறக்க விட்டபடி வந்தார். தனது கையில் சிறிய குழந்தைதையும் அவர் வைத்திருந்தார். அதுவும் ஒரு சின்னக் கொடியை தனது கையில் வைத்திருந்தது.
ஆனால் அவர்களைப் போலீஸார் கைது செய்யவில்லை. போலீஸ் தரப்பில் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டதாக காரணம் கூறப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘அந்த நபரிடம் போலீஸார் பேசினர். அப்போது அவர் அளித்த விளக்கம் சட்டப்படியானதாக இருந்தது. குறிப்பாக பொதுமக்கள் ஒழுங்கு சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தது. எனவேதான் அவர் கைது செய்யப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
தனிநாடு கோரிக்கை என்பது சட்டவிரோதமானது அல்ல என்பதால் அவர்களின் கோரிக்கையும், ஒரு தனி நாடு கோரிக்கை தொடர்பான கொடியும் சட்டவிரோதமாக இங்கிலாந்து சட்டத்தின் கீழ் கருதப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இங்கிலாந்து போலீஸாரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இங்கிலாந்தில் தீவரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த சம்பவத்தின் நினைவு நாள் நாளை வரும் நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.