யு.எஸ்.: சுவரில் 'வோட் ஃபார் டிரம்ப்' என எழுதி கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்கு தீ வைப்பு
மிசிசிப்பி: அமெரிக்காவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்கு தீ வைத்து அதன் சுவர்களில் டிரம்புக்கு வாக்களியுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் கிரீன்வில்லில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருப்பினத்தவர்களின் தேவாலயமான ஹோப்வெல் மிஷனரி பாப்டிஸ்ட் தேவாலயம் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு யாரோ தேவாலயத்திற்கு தீ வைத்துவிட்டனர்.
'Vote Trump' painted on black church set ablaze in Mississippi https://t.co/IOI0oy7TaA pic.twitter.com/nPJYYhOzOJ
— CNN (@CNN) November 2, 2016
மேலும் தேவாலய சுவர்களில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்புக்கு வாக்களிக்குமாறு எழுதியுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த தேவாலயம் எரிந்து நாசமாகிவிட்டது.
இது குறித்து கிரீன்வில் போலீஸ் அதிகாரி டெலான்டோ வில்சன் கூறுகையில்,
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவாலய சுவரில் டிரம்புக்கு வாக்களிக்குமாறு எழுதியுள்ளது மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது என்றார்.
இது குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. டிரம்ப் இன பிரச்சனையை தூண்டுவதாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.