கறுப்பு மாம்பா பாம்பு கடித்து உயிர் வாழும் அதிசய மனிதர்... உடம்பு முழுக்க விஷம்!
உலகிலேயே கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை கையில் கடிக்கவைத்த ஒருவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
நியூயார்க்: கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை தனது கையில் கடிக்க வைத்து தான் அதிக விஷ எதிர்ப்பு கொண்ட மனிதர் என்று நிரூபித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாம்பு ஆராய்ச்சியாளர்.
பாம்பென்றாலே படையும் நடுங்கும். தினசரியும் வெள்ளை நாகினியும் கறுப்பு நாகினியும் டிவியில் கட்டிப்புரண்டு சண்டை போடுகிறார்கள்.
தமிழ் டிவி சேனலிலோ நந்தினி பாம்போடு கருநாக பாம்பு கட்டி உருள்கிறது. குழந்தைகளுக்கு இது வேடிக்கையாக அமைந்து விட்டது. ஆனாலும் பாம்பை நேரில் பார்த்தால் பலருக்கும் அச்சம்தான்.
பாம்பு பற்றி டிப்ஸ்
உலகில் 3000 வகைப் பாம்புகள் இருக்கின்றன. நாகப்பாம்பு, கறுப்பு மாம்பா அதிக விஷம் கொண்டவை.
பாம்புகள் அசைவப் பிராணிகள். அதற்கு இமைகள் கிடையாது. நாக்கின் மூலம் வாசனையை நுகர்கின்றன.
ஒரு ஆண்டுக்கு ஒருமுறை தனது தோலை உரிக்கின்றன. மனிதர்கள், பிற விலங்குகள் போல உணவை கடித்துச் சாப்பிடாமல், அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டு விடும். நெகிழ்வான தாடைகள் உடல் அமைப்புகள் இருப்பதால் எவ்வளவு பெரிய இரையையும் விழுங்கமுடியும்.
பாம்பு கடியால் மரணம்
மனிதர்களால் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சியே பாம்புகள் கொத்தி விஷத்தை வெளியேற்றுகின்றன.
ஆண்டு தோறும் ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் பாம்பின் விஷ பாதிப்பினால் உடல் ஊனமடைகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம்.
கருப்பு மாம்பா கடி
பாம்பை தேடி பிடித்து கடிக்க வைத்துள்ளார் ஒரு மனிதர். அதுவும் கடித்த 15 நிமிடத்தில் மரணத்தை ஏற்படுத்தும்
கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை கடிக்கவைத்து சாகசம் செய்துள்ளார். அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த டிம் ஃபிரைடு என்பவர் பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.
விஷ எதிர்ப்பு மனிதர்
இயற்கையிலேயே அதீத நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட இவர், தன்னை சுயபரிசோதனை செய்யும் வகையில் அதிக விஷம் கொண்ட ஆப்பிரிக்காவின் கருப்பு மாம்பா என்ற பாம்பினை தன்னைக் கடிக்க வைத்து காட்டியுள்ளார். இதன் மூலம் அதிக விஷ எதிர்ப்பு கொண்ட மனிதர் என்று நிரூபித்துள்ளார்.
பாம்பு கடித்து எதுவும் ஆகலை
மாம்பா வகை பாம்புகள் கடித்தால் அடுத்த 15 நிமிடங்களில் மனிதன் இறந்து போக வாய்ப்புள்ள நேரத்தில், டிம் ஃபிரைடு, மறுநாள் வழக்கம் போல் தனது அலுவலகப் பணிகளை மேற்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஷம் பற்றிய விழிப்புணர்வு
கடந்த 17 ஆண்டுகளாக இவர் பாம்புகளை கடிக்க வைத்து சாதனை செய்து வருகிறார். ஏன் இப்படி பாம்புகளோட விளையாட்டு என்று கேட்டால், என்னுடைய நோக்கம் பாம்புகளைப் பற்றியும், விஷ எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்கிறார் இந்த மனிதர். என்னமோ போங்கப்பா... டிம் ஃபிரைடு உடம்பு முழுக்க ரத்தம் விஷமாத்தான் இருக்கும் போலயே.