அடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்!!
சுவிஸ் வங்கியில் எப்போதும் போடப்படுவதை விட 2017ஆம் ஆண்டில் 50 சதவிகிதம் அதிகமாக இந்தியாவில் இருந்து பணம் போடப்பட்டுள்ளது.
பெர்ன்: சுவிஸ் வங்கியில் 2017 ஆம் ஆண்டில் எப்போதும் போடப்படுவதை விட 50 சதவிகிதம் அதிகமாக இந்தியாவில் இருந்து பணம் போடப்பட்டுள்ளது. 2017ல் மட்டும் மொத்தம் ரூபாய் 7000 கோடி கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி தேர்தலில் நின்ற போது வாக்குறுதி அளித்து இருந்தார். மோடி கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.
ஆனால் கடைசி வரை கங்கையை சுத்தப்படுத்தாது போலவே, சுவிஸ் வங்கியில் இருந்தும் கறுப்புப்பணம் மீட்கப்படவேயில்லை. மாறாக அங்கு கருப்பு பணம் குறைவதை விட அதிகமாகி உள்ளது.
குறைந்தது
மோடி பதவியேற்ற போது, சுவிஸ் வங்கியில் போடப்பட்ட பல கோடி கருப்பு பணங்கள் வேறு வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக 2015ம் வருடத்தில் மிகவும் அதிக அளவில் வெளிநாட்டு வங்கிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் இருந்து பணம் மாறியுள்ளது. மொத்தமாக இந்தியாவை சேர்ந்த 4500 கோடி ரூபாய் பணம் சுவிஸ் வங்கியில் இருந்து வெளியேறி உள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக
ஆனால் மோடி பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மீண்டும் இந்த பணம் சுவிஸ் வங்கிக்கு திரும்பியுள்ளது. 2016, 2017, 2018 என வரிசையாக பணம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சுவிஸ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளது. 2017ல் மிகவும் அதிக அளவில் சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்டுள்ளது. சுவிஸ் வரலாற்றில் மிகவும் அதிக அளவில் 2017ல்தான் பணம் போடப்பட்டுள்ளது.
எவ்வளவு பணம்
2017ல் இந்தியாவில் இருந்து பணம் போட்டவர்களின் எண்ணிக்கை 2016ல் போடப்பட்டதை விட 50 சதவிகிதம் அதிக ஆகும். 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. 2017 ல் மொத்தம் 7000 கோடி ரூபாய் பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. 2018ல் இது இன்னும் அதிகரித்துக் கொண்டுள்ளது. மொத்தமாக உலக அளவில் 100 லட்சம் கோடி பணம் இதில் போடப்பட்டுள்ளது.
எதுவும் நடக்கவில்லை
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின்பு கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மோடி கூறி இருந்தார். ஆனால் இதற்கு பின்புதான் கருப்பு பணம் மிகவும் அதிக அளவில் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.