கறுப்பு பண வேட்டை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் ரு. 4500 கோடியாக குறைவு
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் பாதியாக குறைந்ததாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கியின் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையே சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் டெபாசிட் செய்யப்படுவது குறைவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டே இந்தியர்கள் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து விட்டதாகவும் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வருகின்றனர். அந்தவகையில் ஏராளமான இந்தியர்களும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பெருமளவில் பணத்தை டெபாசிட் செய்து உள்ளனர்.
கறுப்பு பணம்
சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் அந்த பணத்தை டெபாசிட் செய்வோம் என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்கட்சியாக இருந்த பாஜக கூறியது.
பணமதிப்பு நீக்கம்
பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் கறுப்பு பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது மத்திய பாஜக அரசு. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என்று நவம்பர் 8ஆம் தேதி இரவு மோடி அறிவித்தார்.
சுவிட்சர்லாந்து வங்கி
கறுப்பு பணம், கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் இருப்பு வைத்துள்ள கருப்பு பணம் குறித்து சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கி
சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் ரூ.4,500 கோடியாக சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எங்கே போனது பணம்
1987ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இத்தகைய புள்ளி விவரத்தை சுவிஸ் வங்கி வெளியிட்டுவருகிறது. அதன்படி, 30 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான், இந்தியர்கள் பணம் போடுவது குறைந்துள்ளது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையில், பெரும் முதலாளிகள் தங்களது கறுப்புப் பணத்தை வேறு வங்கிகளில் பதுக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.
கறுப்பு பணம் எவ்வளவு
சுவிஸ் வங்கிகளில் மிக அதிக அளவாக கடந்த 2006ஆம் ஆண்டு இறுதியில் 6.5 பில்லியன் பிராங் (சுமார் 23 ஆயிரம் கோடி) அளவுக்கு இந்தியர்களின் கருப்பு பணம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி 1,217.6 மில்லியன் ஃபிராங் (சுமார் ரூ.8,392 கோடி) கருப்பு பணம் இருப்பதாக கூறப்பட்டது.
குறைந்து போன டெபாசிட்
இது கடந்த 2014ஆம் ஆண்டை விட 596.42 மில்லியன் ஃபிராங் குறைவாகும். 2016ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ் லங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணத்தை இந்தியர்கள் திரும்ப எடுத்து விட்டதாகவும் இப்போது இந்தியர்களின் பணம் மொத்தமே 4500 கோடி மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுவிஸ் மத்திய வங்கி.