என்னை நம்பினால் கட்டிப் பிடியுங்கள்.. பாரீஸ் மக்களை நெகிழ வைத்த இஸ்லாமியர்
பாரீஸ்: தீவிரவாதத் தாக்குதலால் சின்னாபின்னமாகியுள்ள பாரீஸ் நகர மக்களின் மனங்களை நெகிழ வைத்துள்ளார் ஒரு முஸ்லீம் நபர்.
புண்பட்டுக் கிடக்கும் பாரீஸ் நகர மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்றதோடு உங்களைப் போலவே நானும் துயரப்பட்டுள்ளேன் என்று கூறி அவர்களை நெகிழ வைத்துள்ளார் அந்த இஸ்லாமியர்.
பாரீஸ் நகரின் பிளேஸ் டி லா ரிபப்ளிக் என்ற சதுக்கப் பகுதியில் தனது கண்களை கட்டிக் கொண்டு நின்றபடி அவர் செய்த காரியம்தான் அனைவரையும் நெகிழ வைத்தது.
நான் ஒரு முஸ்லீம்
தனது இரு கண்களையும் கட்டி கொண்ட அந்த நபர், நான் ஒரு முஸ்லீம். ஆனால் என்னை எல்லோரும் பயங்கரவாதி என்கிறார்கள். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா. அப்படியானால் என்னைக் கட்டிப்பிடியுங்கள் என்று அவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் அனைவரையும் உருக்கி விட்டது.
கண்ணீர் மல்க
அவரது வேண்டுகோளை ஏற்று பலரும் வரிசையில் நின்று அந்த இஸ்லாமியரை கட்டிப்பிடித்து அவரது வேதனையில் தாங்களும் பங்கு கொண்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது உலகெங்கும் பரவி வருகிறது.
ஐஎஸ் தாக்குதல்
கடந்த வெள்ளிக்கிழமைன்று பாரீஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 130 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
முஸ்லீம்கள் தீவிரவாதத்தை வெறுக்கிறார்கள்
அந்த இஸ்லாமிய நபர் தன்னைக் கட்டிப்பிடித்த அனைவருக்கும் நன்றி கூறி விட்டு அவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைவருக்கும் நல்ல செய்தி போக வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன். நான் முஸ்லீம்தான். ஆனால் தீவிரவாதி இல்லை. முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது.
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை
நான் யாரையும் கொன்றதில்லை. கடந்த வெள்ளிக்கிழமை எனது பிறந்த நாள். அன்று நான் வெளியில் கூடப் போகவில்லை. உயிரிழந்த அத்தனை பேரின் குடும்பத்திற்காகவும் நான் இரங்குகிறேன், பிரார்த்திக்கிறேன். முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது. தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. இஸ்லாமில் தீவிரவாதத்திற்கும் இடமில்லை.
மதத்தில் இடமில்லை
ஒரு சக மனிதனைக் கொல்லும் உரிமையை எந்த மதமும் தரவில்லை. இஸ்லாமில் தீவிரவாதத்திற்கு இடமே இல்லை. உண்மையான இஸ்லாமியன் யாரையும் கொல்ல மாட்டான் என்றார் அவர்.