சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்காக நடந்த மாபெரும் ரத்ததான முகாம்
ரியாத்: சவுதியில் தமுமுகவின் அல்கோபர் கிளை ஹஜ் யாத்ரீகர்களுக்காக மிகப் பெரிய ரத்ததான முகாமை கடந்த 12ம் தேதி நடத்தியது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அல்கோபர் கிளை ரத்ததான முகாம்கள் நடத்துவதில் முன்னுதாரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவசரத் தேவைக்கான ரத்ததானம் முதல் ஆண்டுதோறும் ஹாஜிகளுக்காகவும் ரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியா கிழக்கு மாகாண தமுமுகவின் அல்கோபர் கிளை 2014 ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணிகளுக்காக அக்ரபியாவில் அமைந்துள்ள தம்மாம் பல்கலைக்கழகத்துடன் (கிங் ஃபஹத் மருத்துவமனை) இணைந்து 12-9-2014 அன்று மாபெரும் ரத்ததான முகாமை நடத்தியது.
நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடந்த முகாமில் கலந்து கொண்டு மக்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தார்கள். சுமார் 250 பேர் கலந்து கொண்ட இந்த ரத்ததான முகாமில் மருத்துவமனையின் வசதிக்கேற்ப 120 பேர் ரத்ததானம் செய்தனர். குறிப்பாக தன்னலம் மற்றும் ஜாதி மத பேதமற்ற தமுமுகவின் செயல்பாட்டால் கவரப்பட்ட மாற்று மத மக்களும் மிகவும் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமிற்கு அல்கோபர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மண்டல நிர்வாகிகள் உட்பட அனைவரும் முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.