இந்திய சுதந்திர தினத்தையொட்டி ஜித்தாவில் ரத்ததான முகாம்
ஜித்தா: இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி அன்று ஜித்தாவில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 14-08-15 அன்று மாலை 4.30 மணி முதல் ஜித்தா மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 60 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 50 பேரிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவரான முஹம்மது முனாஃப் இம்முகாம் பற்றி கூறுகையில்,
இந்திய சுதந்திர தினத்தன்று இந்தியர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு பதிலாக ஆடல், பாடல் போன்ற கேளிக்கைகள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது, நடிகர் நடிகையரின் சுய புராணங்கள் பாடுவது போன்றவற்றையே காலங்காலமாக இந்தியர்கள் செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் நாங்கள் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மக்களுக்கு பயனுள்ள வகையில் ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம், உம்ரா மற்றும் ஹஜ் பயணிகளுக்காக இதுபோன்ற முகாம்கள் நடத்துவதுடன் அவசர தேவைக்காகவும் ரத்ததானம் செய்து வருகின்றோம் என்றார்.
இது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 9வது ரத்ததான முகாம் ஆகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக தமிழகத்தில் மட்டுமின்றி சவுதி அரேபியாவில் ஜித்தா மற்றும் ரியாத்திலும், துபாயிலும் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
வளைகுடா நாடுகளில் அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.