இந்திய சுதந்திர தினத்தையொட்டி ரியாத்தில் நடந்த ரத்ததான முகாம்
ரியாத்: இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ரியாத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 15-08-14 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ரியாத் மாநகரில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 66 பேரிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. இதில் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் கொடையாளிகள் ரத்ததானம் செய்தனர். மேலும் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஏமன், சிரியா, எத்தியோப்பியா மற்றும் சவுதி நாட்டவரும் இந்த இந்திய சுதந்திர தின ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
ரத்ததான முகாமின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல செயலாளருமான சோழபுரம் ஹாஜா இம்முகாம் பற்றி கூறுகையில்,
இந்திய சுதந்திர தினத்தன்று இந்தியர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு பதிலாக ஆடல், பாடல் போன்ற கேளிக்கைகள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது, நடிகர், நடிகையரின் சுய புராணங்கள் பாடுவது போன்றவற்றையே காலங்காலமாக இந்தியர்கள் செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் நாங்கள் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மக்களுக்கு பயனுள்ள வகையில் ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம்.
இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம், உம்ரா, மற்றும் ஹஜ் பயணிகளுக்காக இதுபோன்ற முகாம்கள் நடத்துவதுடன் அவசர தேவைக்காகவும் ரத்ததானம் செய்து வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.
இது தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 31வது ரத்ததான முகாமாகும். வளைகுடா நாடுகளில் அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.