ஓவர்நைட்டில் பிரபலம்.. சிங்கிள் "டீ" கூட போட முடியாமல் தவிக்கும் "நீலக் கண்ணன்"
இஸ்லாமாபாத்: சிலருக்கு எதிர்பாராத வகையில் பிரபலம் வந்து சேரும். அப்படிப்பட்ட அரிய நபர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் அர்ஷத் கான். இவரது திடீர் பிரபலத்திற்குக் காரணம் இவரது கண்கள்.. அதாவது நீல நிறக் கண்கள்.
ஒரே நாளில் இவர் உலகப் புகழ் பெற்று விட்டார். இப்போது இவரது டீக்கடையில் டீயை விட இவரைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டம்தான் "ஹாட்" ஆக இருக்கிறது.
சரியா வேலை கூட பார்க்க முடியவில்லை. எப்பப் பார்த்தாலும் கூட்டமா இருக்கே என்று செல்லமாக அலுத்துக் கொள்ளும் அளவுக்குப் பிரபலமாகி விட்டார் அர்ஷத் கான். இவரை இந்த அளவுக்குப் பிரபலப்படுத்தியது ஜியா அலி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்ட புகைப்படம்தான்.
இஸ்லாமாபாத் அர்ஷத் கான்...
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல பெஷாவர் செளக், சன்டே பஜாரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் அர்ஷத் கான். இவரது கடைக்கு சமீபத்தில் ஜியா கான் என்ற உள்ளூர் பெண் புகைப்படக்கலைஞர் வந்துள்ளார்.
வைரல் ஆன புகைப்படம்...
அர்ஷத் கானின் கண்ணைப் பார்த்த ஜியா அலிக்கு ஆச்சரியம். காரணம், நீல நிறத்தில் அவரது கண்கள் இருந்தன. பார்க்கவும் அழகாக இருந்தார். இதையடுத்து அவரை புகைப்படம் எடுத்த ஜியா அலி, அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டார்.
திடீர் பிரபலம்...
பிறகென்ன.. வெகு வேகமாக அந்தப் புகைப்படம் வைரல் ஆகி பிரபலமாகி விட்டார் அர்ஷத் கான். #chaiwala என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமாகி விட்டது. அர்ஷத் கான் பற்றி பாகிஸ்தான் முழுவதும் பேச்சு கிளம்பி விட்டது. சர்வதேச அளவில் மீடியாக்களும் கூட குறிப்பாக அமெரிக்க இணையதளமான பஸ்பீட் கூட செய்தி வெளியிட்டது.
|
பேஸ்புக்கே தெரியாத பிரபலம்...
இதுகுறித்து உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு அர்ஷத் கான் அளித்த பேட்டியில், "தான் பிரபலமாகி விட்டதை உணர்ந்துள்ளதாகவும். அதேசமயம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என்றால் என்ன என்றே தனக்குத் தெரியாது" என்றும் அடக்கமாக கூறியுள்ளார்.
|
18 பிள்ளைகள்...
அர்ஷத்தின் கூடப் பிறந்தவர்கள் 17 பேராம். மிகப் பெரிய குடும்பம். எப்போதாவது தான் உலகப் புகழ் பெறுவேன் என்று முன்பே எதிர்பார்த்துக் காத்திருந்தாராம் அர்ஷத். ஆனால் இப்படிப் பிரபலமாவோம் என்று அவர் எதிர்பார்க்கவில்லையாம்.
வேலை பார்க்க முடியலையே...
மேலும் அவர் கூறுகையில், எப்போது பார்த்தாலும் எனது கடைக்கு கூட்டம் வருகிறது. என்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். என்னால் டீ கூட சரியாக போட முடியவில்லை. அதுதான் என் பிழைப்பு. அதற்கு எதுவும் பங்கம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறுகிறார் கவலையுடன். தினசரி பலரும் வந்து இவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனராம்.
இந்தியர்கள்...
இதில் வேடிக்கை என்ன தெரியுமா.. இந்த பாகிஸ்தான் டீக்கடைக்காரர், இந்தியாவிலும் அதிக பிரபலமாகி விட்டார் என்பதுதான். இந்தியர்கள்தான் பெருமளவில் இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்களாம்.