நீலவானம், செந்நிற ஐஸ்... செவ்வாயைத் தொடர்ந்து புளூட்டோவிலும் நீர்... நாசா அறிவிப்பு
நியூயார்க்: பூமியைப் போலவே புளூட்டோவிலும் நீல நிற வானம் தோன்றுவதாக நாசா அறிவித்துள்ளது.
பூமியைத் தாண்டி மற்ற கிரகங்கள், பால்வெளிமண்டலம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கென பல்வேறு விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் உதவியோடு சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நாசா.
இந்நிலையில், தற்போது புளூட்டோ கிரகத்திலும் நீல நிறத்தில் வானம் தோன்றுவதாகவும், சிவப்பு நிறத்தில் ஐஸ்கட்டிகள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
9வது கிரகம்...
சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளாக கூறப்பட்டு வந்தது புளூட்டோ கிரகம். பூமியின் நிலாவை விட சற்றே சிறிதான இந்தக் கிரகத்திற்கு ஐந்து நிலாக்கள் இருக்கின்றன.
நியூ ஹாரிசான்ஸ்...
சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவைப் போல் 40 மடங்கு தூரம் இடைவெளி கொண்டது புளூட்டோ. பனியால் உறைந்து போயுள்ள இந்த கிரகத்தைப் பற்றி ஆராய சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது.
விதவிதமான புகைப்படங்கள்...
கடந்த ஜூலை மாதம் புளூட்டோ கிரகத்தைக் கடந்து சென்ற இந்த விண்கலமானது தற்போது, பூமியிலிருந்து சுமார் 3.1 பில்லியன் மைல் தூரத்தில் சீரான நிலையில் சுற்றுக் கொண்டிருக்கிறது.
அரிய தகவல்கள்...
புளூட்டோவைக் கடந்து சென்ற போது நியூ ஹாரிசான்ஸ் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்தது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அது அனுப்பி வருகிறது. அந்தப் புகைப்படங்கள் மூலம் புளூட்டோ மற்றும் அதன் நிலாக்கள் குறித்த பல அரிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற்று வருகின்றனர்.
புளூட்டோவிலும் நீர்...
இந்நிலையில், நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. அதாவது செவ்வாயைத் தொடர்ந்து புளூட்டோவிலும் நீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது.
நீலவானம்...
இது தொடர்பாக நியூ ஹாரிசான்ஸ் எடுத்துள்ள புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அதில், பூமியில் உள்ளதைப் போன்றே நீல நிற வானம் புளூட்டோவிலும் காணப்படுவது தெரிய வந்துள்ளது.
காரணம்...
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் சிதறல், வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் மீது மோதும்போது வானம் நீலமாகத் தோன்றுவதால் புளூட்டோவின் வானம் நீலமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.
சிவப்பு நிறத்தின் பனிக்கட்டி...
அதோடு, புளூட்டோவில் ஆங்காங்கே உறைந்த நிலையில் நீர் காணப்படுவதாகவும், அவை சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதனால் அவை சிவப்பு நிறத்தில் தோன்றுகின்றன என விஞ்ஞானிகள் தங்களது ஆய்வை தொடங்கியுள்ளனர்.